எப்போது திருமண மோதிரம் போடப் போகிறாய் திருமா?: கருணாநிதி கேள்வி
சிதம்பரம்: எப்போது கல்யாண மோதிரம் போடப் போகிறாய் திருமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி, கீழரதவீதியில் கடந்த 10ம் தேதி நடந்த பிரச்சார கூடத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.
அந்த கூட்டத்தில் பேசிய திருமா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இன்று சிதம்பரம் வந்துள்ளார். நடராஜனை தரிசிக்க அல்ல திருமாவளவனுக்கு மோதிரம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கேட்க தான். இதைக் கண்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் அவர்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளேன்.
நான் சின்னமாக பெற்று உள்ள இந்த மோதிரத்திற்கு கணையாழி என்று மற்று ஒரு பெயரும் உண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் கருணாநிதிக்கு ஒரு கணையாழி வாங்கித் தர வேண்டும் என்று கடை கடையாக ஏறி இறுதியாக ஒரு கணையாழி (மோதிரம்) வாங்கி கலைஞர் கருணாநிதி அவர்களின் விரலில் அணிவித்து மகிழ்த்தார்.
அதை நினைவூட்டும் விதமாக இன்று விடுதலைச் சிறுத்தைகளுக்கு மோதிரம் சின்னம் கிடைத்துள்ளது என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில்,
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தம்பி திருமாவளவனுக்கு மோதிரம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது. மோதிரம் சின்னம் என்பது ஒரு நல்ல அடையாளம். மோதிரம் எப்போது போடுவார்கள் என்று உங்களுக்கு தெரியும்.
எப்போது கல்யாண மோதிரம் போடப் போகிறாய் என்று நான் ரொம்ப நாளாக திருமாவளவனை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இப்போது தேர்தல் ஆணையமாகவே பார்த்து மோதிரம் சின்னம் கொடுத்திருப்பது விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறும் என்பதற்கு அடையாளம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.