தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்? மதுரை ஹைகோர்ட் கேள்வி
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும்? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி சாம்பவார் வடகரையைச் சேர்ந்த சக்திவேல், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். மது அருந்திவிட்டு அவரது தாயாரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் தினசரி 70 லட்ச தொழிலாளர்கள் மது அருந்துவதாக புகார் உள்ளது. இவர்களில் பலர் தினசரி கூலிகள். இவர்கள் தினமும் 50 சதவீதத்திற்கு மேல் 150 மிலி அளவு கொண்ட மதுவினை வாங்குவதில் செலவு செய்கின்றனர்.
இதனால் பலரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் இதுவே காரணமாகிறது. தமிழகத்திலிருக்கும் 6800 மதுக்கடைகள் மூலம் அரசுக்கு 35 சதவீத வருமானம் கிடைக்கிறது. அதிமுக அரசு 2016 மே செப்டம்பர் பொதுத் தேர்தலில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொணரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்த்து. அதனடிப்படையில் ஜூன் 19ல் 500 கடைகளை மூட உத்தரவிட்டது.
பின்னர் படிப்படியாக டாஸ்மாக் கடைகளுக்கான பணி நேரத்தில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது. மது அருந்துவதால், புற்றுநோய் உள்ளிட்ட 60 சதவீத நோய்கள் வருவதாக வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆல்கஹால் கல்விப்பிரிவு கூறுகிறது. பல மாநிலங்களில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. குஜராத் முதல்வர் நிதிஷ்குமார் 2015 ஏப்ரலில் குற்றங்களைக் குறைப்பதற்காக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறியுள்ளார்.
அதிக விபத்துக்களை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் டிசம்பர் 2016ல் உத்தரவிட்டது. அதே போல நீதிமன்றங்களில் மது பாதிப்பு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. எனவே நீதிமன்றம் மத்திய அரசின் கேபினட் செயலர், சட்டம் மற்றும் சமூல நலத்துறை செயலர், தமிழக உள்துறை செயலர், தமிழ்க வருவாய்த்துறை செயலர், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோரை தாமாக முன்வந்து மனுதாரராக சேர்க்கிறது. இவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
1. 2016 ஜூன் 19ல் 500 கடைகள் மூடுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் வாக்குறுதிப்படி பூரண மதுவிலக்கை கொணர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
2. அடுத்தகட்டமாக எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன?
3. தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் எப்போது முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்?
4. இந்தியா மற்றும் தமிழகத்தில் மது உபயோகிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளதா?
5. அது குறித்த ஆண்டு வாரியாக அறிக்கை தாக்கல் செய்யவும்
6. மதுவால் குற்றங்கள் அதிகரித்துள்ளனவா?
7. மதுவால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தமிழகத்தில் எவ்வளவு குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்த முழுவிபரம்
8. அதன் ஆண்டுவாரியான முழு விபரம்
9. மது எளிதில் கிடைப்பதால் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மதுவிற்கு அடிமையாகின்றனரா?
10. சிறுவர்கள் மதுவிற்கு அடிமையாவதால் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனரா? சிறுவர்களுக்கு எளிதில் கிடைப்பதைத் தடுக்கும் சட்ட்த்தை ஏன் கடுமையாக அமல்படுத்தக்கூடாது?
11.ஆண்கள் மதுவிற்கு அடிமையாவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனரா?
12. மதுவின் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறதா?
13. இந்தியாவில் 96 நிமிடத்திற்கு ஒருவர் மதுவால் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் இதற்கான தனிவார்டுகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏன் ஏற்படுத்த கூடாது?
14. மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாலுகா வாரியாக மறுவாழ்வு மையம் ஏன் அமைக்கக்கூடாது?