மழை வருது.. வாளியை எடு.. தண்ணியைப் பிடி.. இது சென்னை 'இன்டர்நேஷனல்' ஏர்போர்ட்!
சென்னை: வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட ஆரம்பித்து விடுகிறார்களாம் சென்னை விமான நிலைய ஊழியர்கள். எதற்கு பிளாஸ்டிக் வாளி எனக் கேட்கிறீர்களா...? வேறு எதற்கு மழை பெய்யும் போது தண்ணீர் ஒழுகும் இடங்களில் வைப்பதற்குத் தான்.
குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்.
சமீபத்தில் விஸ்தீகரிக்கப் பட்ட சென்னை விமான நிலையத்தில் தான், மழை நீர் ஒழுகாமல் இருக்க வாளிகள் வைக்கப் பட்ட அவலகாட்சியைக் காண முடிந்தது.
ஒழுகும் விமானநிலையம்...
சரியான கட்டுமானம் இல்லாததால் சமீபத்தில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையக் கூரைகள் இடிந்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேற்கூரையில் உள்ள இடைவெளியின் காரணமாக மழை பெய்தால், ஆங்காங்கே ஒழுகுகிறதாம் சென்னை விமான நிலையம்.
வாளி எங்கப்பா...?
பயணிகள் கூடும் இடம், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ள இடம் ஆகிய இடங்களில் மழை நீர் ஒழுகுவதால், மழை மேகம் கூடியவுடன் முன்னெச்சரிக்கையாக மழை நீர் ஒழுகும் இடங்களில் வைக்க வாளி தேடி ஓடுகிறார்களாம் விமான நிலைய ஊழியர்கள்.
அடடா மழைடா...
கடந்த ஞாயிறன்று பெய்த அடைமழைக்கு கிட்டத்தட்ட 10 வாளிகள் வெவ்வேறு இடங்களில் வைக்கப் பட்டு, விமான நிலையத்திற்குள் தண்ணீர் சேராமல் பார்த்துக் கொண்டார்களாம்.
4000ம் பயணிகள்....
சென்னை விமான நிலையத்திற்கு நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 27 விமானங்களும், 4000க்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் வருத்தம்...
விமான நிலையத்தில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளும், பிளாஸ்டிக் வாளிகளும் வைக்கப் பட்டிருந்ததாகவும், ஆனபோதும் பயணிகளை சோதனை போடும் இடம் அருகே மழை நீர் தேங்கி நின்றதாகவும் ஞாயிறன்று விமானப் பயணம் மேற்கொள்ள வந்த பயணி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கவலை....
கிட்டத்தட்ட ரூ 2,015 கோடியில் அதிநவீன உபகரங்கள் கொண்டு கட்டப் பட்டவை இந்த விமான நிலைய மேற்கூரைகள். இதில் அவ்வப்போது குறைபாடுகள் ஏற்படுவது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கவலையில் மூழ்கி உள்ளனர்.
உலக அரங்கில் இந்தியா....
தற்காலிகமாக மழை நீர் ஒழுகுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், விமான நிலையம் என்பது வெறும் விமான பயணம் மேற்கொள்ளும் இடமாக மட்டும் நினைக்காமல், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் இடம் என்றும், இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் பெருமையை உலக அளவில் எவ்வாறு எடுத்துக் காட்டும் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.