நாஞ்சில் சம்பத் எங்கே..?
Recommended Video
சென்னை: அதிமுக அம்மா கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருந்து வரும் நாஞ்சில் சம்பத் சில நாட்களாக வெளியில் தலை காட்டாமல் உள்ளார். அவர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
நாஞ்சில் சம்பத் மீது போடப்பட்ட 11 வழக்குகளின் எஃப்.ஐ.ஆரையும் ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். இதன்பேரில் நல்ல முடிவு வந்தால்தான் வெளியுலகுக்கு வருவார் சம்பத் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார் நாஞ்சில் சம்பத். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆகியோரை தொடர்ந்து விமர்சித்துப் பேசி வந்தார்.
நாஞ்சில் சம்பத் அளவுக்கு யாரும் இல்லை
தமிழக அரசைப் பற்றியும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் சம்பத் அளவுக்கு தினகரன் அணியில் வேறு யாரும் பேசுவதில்லை. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் லோகநாதன், சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், 'அதிமுக அம்மா அணியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத், எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசி வருகிறார்.
அவதூறாகப் பேசுகிறார்
அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு உள்ளது. அவரது பேச்சு பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மோதலை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்படுள்ளது.
தொடர்ந்து பாய்ந்த வழக்குகள்
இதன்பின்னரும், பம்மல், குரோம்பேட்டை, அம்பத்தூர், குடியாத்தம், பல்லாவரம் உள்பட 11க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோதாதென்று சம்பத் வீட்டையும் பா.ஜ.க தொண்டர்கள் முற்றுகையிட்டனர். ஏற்கெனவே, மாநில அரசின் அமைச்சர்கள், சம்பத் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதையே காரணமாக வைத்துக் கொண்டு சம்பத்தைக் கைது செய்யும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன.
வழக்கிலிருந்து தப்ப
நாஞ்சில் சம்பத் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். வரும் வியாழக்கிழமைதான் வழக்கு விசாரணைக்கு வருகிறது. கற்பு குறித்து பேசியதற்காக, பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் 27 வழக்குகள் நடிகை குஷ்பு மீது போடப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மொத்தமாக தள்ளுபடி செய்யக் கோரிக்கை
அதேபாணியில் சம்பத் மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு கோர இருக்கிறோம். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவாக இருக்கிறார். 'என்னால இப்படியெல்லாம் மறைஞ்சு இருக்க முடியலடா' என வேதனைப்படுகிறார். சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கிறார்" என்கிறார் தினகரன் ஆதரவாளர் ஒருவர்.