யாரை சமூக விரோதி என்கிறார் ரஜினி?.. துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான 13 பேரையுமா??
யாரை சமூக விரோதிகள் என்கிறார் ரஜினி? துப்பாக்கிக் குண்டுக்கு பலியான 13 பேரையும் சமூக விரோதிகள் என்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: பொதுமக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் வந்ததாக ரஜினி கூறுகிறாரே, துப்பாக்கிக் குண்டுக்கு பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22-ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகிவிட்டனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் ரஜினி
இந்த துப்பாக்கிச் சூட்டால் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளையே பேசினார்.
யார் உத்தரவு
ரஜினி பேசுகையில் ஆட்சியர் அலுவலகத்தை கொளுத்தியவர்கள் மக்கள் அல்ல. சமூகவிரோதிகள்தான் என்றார். இவரது பேச்சில் துப்பாக்கிச் சூட்டை கண்டிக்கவே இல்லை. யார் உத்தரவின்படி போலீஸார் துப்பாக்கியை பிரயோகித்தனர் என்பதை மருந்துக்குக் கூட கேட்கவில்லை.
யார் அவர்கள்
பாஜக, அதிமுக வரிசையில் ரஜினியும் சமூகவிரோதிகள் என்கிறார். அப்படி என்றால் என்ன, யார் அவர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக விரோதிகள் என்றால் ஏதேனும் கட்சியை சேர்ந்தவர்களா, ஏதாவது சமூகத்தைச் சேர்ந்தவர்களா, இல்லை தொபுகடீர்னு வானத்தில் இருந்து குதித்தவர்களா யார் இவர்கள்.
ரஜினி என்ன பேசுகிறார்
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் 13 பேரும் சமூக விரோதிகளா. ரஜினி அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடும் நடவடிக்கையை வரவேற்ற ரஜினி, இந்த வெற்றி உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் என்றார். அப்படி எனில் போலீஸார் சமூகவிரோதிகளை அடையாளம் காணாமல் அப்பாவிமக்களை சுட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கலாமே, அதையும் ரஜினி செய்யவில்லை.
எல்லா துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னரும்
பொதுவாக தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவை பிரயோகிக்கும்போது வன்முறை ஏற்பட்டது அதனால் இவற்றை பிரயோகித்தோம் என்ற சப்பைக் கட்டு ஆகும் இதே நிலைதான் துப்பாக்கிச் சூட்டிலும் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த கலவரத்தை ஏற்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதெல்லாம் ரஜினிக்கு தெரியாமலா இருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கடைசி நாளில் பைக்குகளை போலீஸாரே கொளுத்திய வீடியோ காட்சிகளை அவரது பார்வைக்கு கிடைக்காமலா இருந்திருக்கும்.
எப்படி தீர்வு
ரசிகர்கள் கூறுவதை போன்று ரஜினி நாளை முதல்வராகினால் காவிரி, முல்லை பெரியாறு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை எப்படி தீர்வு காண்பார். போராடாமல் கோர்ட் படிக்கட்டுகளையே ஏறிக் கொண்டிருந்தால் 5 ஆண்டுகள் முடிவடைந்து அடுத்த தேர்தலே வந்து விடுமே. இனியாவது இவற்றையெல்லாம் சிந்தித்து ரஜினி செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.