தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாகிறாரா கே.பி. மகேந்திரன்?
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கே.பி. மகேந்திரனை நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கே.பி. மகேந்திரனுக்கு வாய்ப்பிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி(கூடுதல் பொறுப்பு) டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் உரிய விதிகளின் படி இம்மாதம் இறுதியில் அவர் ஓய்வு பெற உள்ளார்.
அதேநேரத்தில் சில லாபிகள் மூலம் பணி நீட்டிப்பு பெறுவதற்கான முயற்சிகளிலும் டி.கே. ராஜேந்திரன் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிய டிஜிபியை நியமிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
ஜெ. தேர்வு
1980-ம் ஆண்டு பேட்ச் அர்ச்சனா ராமசுந்தரம், 1983-ம் ஆண்டு பேட்ச் கே. ராதாகிருஷ்ணன், 1984-ம் ஆண்டு பேட்ச் கே.பி. மகேந்திரன், ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் டிஜிபி அந்தஸ்தில் இருப்பவர்கள். இதில் அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை தவிர்த்துவிட்டு டி.கே. ராஜேந்திரனை டிஜிபியாக ஓகே செய்தார் ஜெயலலிதா.
கூடுதல் பொறுப்பாக
அதேநேரத்தில் சீனியாரிட்டி வரிசையில் 5-ம் இடத்தில் உள்ள டி.கே. ராஜேந்திரனை டிஜிபியாக்க முதல் இடத்தில் இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரத்தின் ஒப்புதல் அவசியம். இதை விரும்பாததால் உளவுத்துறையை வைத்திருந்த டிஜிபி டி.கே. ராஜேந்திரனை சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு என லாவகமாக அறிவித்தார் ஜெயலலிதா, இதனால் சட்டம் ஒழுங்கு (கூடுதல் பொறுப்பு) டிஜிபி என்ற நிலையிலேயே டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெறுகிறார்.
அர்ச்சனா ராமசுந்தரம்
தற்போது அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ் ஆகியோரில் ஒருவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணியில் உள்ள அர்ச்சனா ராமசுந்தரம் வரும் அக்டோபரில் ஓய்வு பெறுகிறார். ஆகையால் அவர் இந்த பதவியை விரும்புவாரா என்பது கேள்விக்குறி.
கே.ராதாகிருஷ்ணன்
அடுத்ததாக திமுக அனுதாபி என முத்திரைகுத்தப்பட்டுள்ள கே. ராதாகிருஷ்ணனோ அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இருந்தாலும் எப்படியும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஓய்வு பெறுவதில் அவர் முனைப்புடன் இருக்கிறாராம். இவர்களுக்கு அடுத்து இருக்கும் மகேந்திரனோ 2019-ல்தான் ஓய்வு பெற உள்ளார். மகேந்திரனுக்கு அடுத்ததாக இருக்கும் ஜார்ஜ் வரும் செப்டம்பரில் ஓய்வு பெறுகிறார்.
கே.பி. மகேந்திரன்
கே.பி. மகேந்திரனோ எந்த ஒரு லாபியும் செய்யாமல் விதிகளின்படி பதவி வரட்டும் என நினைக்கிறார். மகேந்திரனை ஓவர்லுக் செய்து நமக்கு நிச்சயம் பதவி கிடைக்காது என்பதால் ஜார்ஜ், மத்திய அரசு பணி பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.
மகேந்திரனுக்கு வாய்ப்பு?
இந்நிலையில் இன்று மத்திய பணியாளர் தேர்வாணையம் புதிய டிஜிபி தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது. டி.கே. ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கான லாபி ஒர்க் அவுட் ஆகாத நிலையில் தற்போது மின்வாரிய விஜிலன்ஸ் டிஜிபியாக இருக்கும் கே.பி. மகேந்திரனையே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்ய அதிகம் வாய்ப்புகள் உள்ளது என்கின்றன கோட்டை தகவல்கள்.