ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப் போவது யார்?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே. நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளும் சுயேச்சை சின்னங்களில் மனுதாக்கல் செய்தன. ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், எடப்பாடி அணி சார்பில் தினகரனும் போட்டியிட்டனர்.
பணப்பட்டுவாடா புகார்
இந்நிலையில் அந்த தொகுதிக்குள்பட்ட இடங்களில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் கட்சியின் நலனுக்காக ஒன்றிணைந்தன. பின்னர் இரட்டை இலைக்கு இரு அணிகளும் சேர்ந்தே பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தன.
வென்றது எடப்பாடி- ஓபிஎஸ் அணி
இரட்டை இலை சின்னம் மதுசூதனன் தலைமையிலான எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கே வழங்கப்பட்டது. இதற்கடுத்த நாளே வெள்ளிக்கிழமை அன்று ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு எப்போது?
வரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்வி எழுகிறது.
வேட்பாளர் தேர்வு
கடந்த தேர்தலில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டதை போல் இந்த தேர்தலில் அவரே நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. அதிமுக அவைத் தலைவர் என்ற முறையிலும், மூத்த தலைவர் என்ற முறையிலும் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
மைத்ரேயன் கூறியது நிஜமாகிவிட்டால்...
மேலும் எடப்பாடி அணி சார்பில் நிறுத்தப்பட்ட தினகரனுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றாகிவிட்டது. இதனால் மதுசூதனனை விடுத்து வேறு வேட்பாளரை தேர்வு செய்தால் மைத்ரேயன் எம்.பி. கூறிய மனங்கள் ஒன்றாகவில்லை என்ற கருத்து நிஜமாகிவிடும் என்பதால் மதுசூதனனுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.