'மன்னர்கள்' போயாச்சு.. அடுத்து திமுகவில் மா.செ. பதவிகளுக்கு போட்டி போடும் 'இளவரசர்கள்'!
சென்னை: திமுகவில் கால்நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருந்த குறுநில மன்னர்களின் ராஜ்ஜியங்கள் பறிக்கப்பட்டுவிட்டன.. திமுகவில் புதியதாக 65 சமஸ்தானங்கள் (மாவட்டங்கள்) ஏற்படுத்தப்பட்டுவிட்டன. இப்போது புதிய சமஸ்தானனங்களிலுமே கூட தங்களின் வாரிசுகளையே 'இளவரசர்களாக' மகுடம் சூட்டிப் பார்க்க காத்திருக்கின்றனர் "எக்ஸாகப் போகும்' குறுநிலமன்னர்கள்.
லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத பெருந்தோல்வியை திமுக எதிர்கொண்டது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் கட்சியை சீரமைக்க பகீரத பிரயத்னங்களை திமுக மேற்கொண்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக 33 நிர்வாகிகளை திமுக தொண்டர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் "களைகள்" களையப்பட்டிருக்கின்றன. இது பலவிதம் சர்ச்சைகளை கிளப்பியும் விட்டிருக்கிறது.
பயிரையும் நீக்கிட்டாங்களே..
"நீக்கப்பட்ட களைகள் அடியோடு களையப்பட வேண்டியதுதான்..ஆனால் சில பயிர்களும் கூட பிடுங்கப்பட்டிருக்கின்றன" என்ற குமுறல் ஒருபக்கம்.. எல்லாமே ஸ்டாலின் எதிர் அணியினர்தான்.. ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட துரோகம் செய்யவில்லையா? என்ற குமுறலும் ஒருபக்கம்.
மாநிலப் பொறுப்பு ப்ளஸ் வாரிசுக்கு பதவி
இவை ஒருபுறமிருக்க எக்ஸ் குறுநில மன்னர்களாகிப் போனவர்கள், தங்களுக்கு மாநில பொறுப்பும் மகன்கள், உறவினர்களுக்கு புதிய மாவட்ட செயலாளர் பொறுப்பும் வாங்கித் தருவதில் பெரும் முனைப்பும் காட்டுகின்றனர்.
கதிர் ஆனந்த்..
லோக்சபா தேர்தல் நேரத்தில் திமுகவில் அதிகம் அடிபட்ட பெயர் கதிர் ஆனந்த்... திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன். இவருக்குத்தான் வேலூர் தொகுதி கேட்கப்பட்டது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோரை பணம் கட்ட வைத்து கருணாநிதியை வெறுப்பேற்றினர். லோக்சபா தேர்தலில் வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளரின் தோல்விக்கு முக்கிய காரணமே துரைமுருகன் தான் என்று கூறப்படுகிறது. இவர் மீது நடவடிக்கை பாயாத நிம்மதியில் வேலூர் மத்திய மாவட்டத்துக்கு கதிர் ஆனந்தை எப்படியாவது செயலராக்கிவிடுவது என்று துடியாய் துடிக்கிறாராம்.
டி.ஆர்.ஆர்.பி. ராஜா
இதேபோல் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகன் எம்.எல்.ஏ. ராஜாவை திருவாரூர் மாவட்ட செயலாராக்குவதற்கான லாபிகளில் இறங்கியிருக்கிறார்.
பொன்முடி மகன்..
விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணியை செயலாளராக்குவதற்கு போராடி வருகிறார்.
வேலு மகன் கம்பன்
இதேபோல் திருவண்ணாமலை எ.வ.வேலு தன் மகன் கம்பனை மாவட்ட செயலாளராக்க முயற்சித்து வருகிறார்.
பைந்தமிழ் பாரி
அதேபோல் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மகன் பைந்தமிழ் பாரியை கொண்டுவருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் பொங்கலூர் பழனிச்சாமி. 1996ஆம் ஆண்டு திமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது மனைவிக்கு மாவட்ட செயலாளர் பதவி வாங்கிக் கொடுத்த பெருமைக்குரியவர் பொங்கலூரார்.
ஐ.பி. செந்தில்குமார்
திண்டுக்கல் மாவட்டம் இப்போது கிழக்கு, மேற்காக பிரிக்கப்பட்டுவிட்டது. இதனால் மேற்கு மாவட்ட செயலாளராக ஒட்டன்சத்திரம் சக்கரபாணிக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் மாவட்ட செயலார் ஐ.பெரியசாமியோ தனது மகன் செந்தில்குமாரை மேற்கு மாவட்ட செயலராக்கிவிட்டு தனக்கு மாநிலப் பதவி வாங்கும் மும்முரத்தில் இருக்கிறார்.
ஜெகன்
இதேபோல் தூத்துக்குடி பெரியசாமியும் தனது மகன் ஜெகனுக்கு எப்படியும் மாவட்ட செயலாளர் பதவியை வாங்குவது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஆ, கானா வாரிசுகள்
மேலும் நெல்லையில் ஆவுடையப்பன் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும் தங்களது வாரிசுகளை மாவட்ட செயலாளர்களாக்கிவிடுவதற்கு போராடி வருகின்றனர்.
இவை மட்டுமின்றி தங்களது உறவினர்கள், பினாமிகள் என பலரையும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அமர்த்துவதற்கும் குறுநில மன்னர்கள் தீவிரமாக இருக்கிறார்களாம்.