மகன்களுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் காங். சீனியர்கள்...8 தொகுதி வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமல் காங்கிரஸ் தத்தளித்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மகன்களுக்கு சீட் தர வேண்டும் என்ற அடம்பிடித்துக் கொண்டிருப்பதால் இழுபறி நீடிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டனர்.
இதன்பின்னர் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளிவந்துவிடும்.. இன்று மாலை வெளியாகிவிடும் என்று நாள்தோறும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் வேட்பாளர் பட்டியல்தான் வரவில்லை. இதற்கு காரணமே எஞ்சிய தொகுதிகளுக்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முட்டி மோதுவதால்தானாம்.

3 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட்
தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.க்களான விஜயதாரணி, கோபிநாத் மற்றும் பிரின்ஸ் ஆகியோருக்கு விளவங்கோடு, குளச்சல் மற்றும் ஓசூர் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2011 தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்ற போது 2 எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.வாசனுடன் தமிழ் மாநில காங்கிரஸுக்கு தாவிவிட்டனர்.

திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மகன்களுக்கு சீட் கேட்டு போராடி வருகின்றனர். இவர்களில் முதலில் வென்றது திருநாவுக்கரசர்தான். ஒருவழியாக அறந்தாங்கி தொகுதியில் மகன் எஸ்.டி. ராமச்சந்திரனை வேட்பாளராக்கிவிட்டார்.

தங்கபாலு
இதேபோல் மயிலாப்பூர் தொகுதியை மகனுக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதில் மிக தீவிரமான லாபியில் இருக்கிறார் முன்னாள் காங். தலைவர் கே.வி. தங்கபாலு. கடந்த 2011 தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியை மனைவி ஜெயந்திக்கு வாங்கிக் கொடுத்தார் தங்கபாலு. அத்துடன் தங்கபாலு டம்மி வேட்பாளராகவும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
திடீரென ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடியாக அதிரடியாக தங்கபாலுவே வேட்பாளரான பெரும் கூத்து நடந்தேறியது நினைவிருக்கலாம்.

கிருஷ்ணசாமி, நாசே
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி செய்யாறு தொகுதியை மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத்துக்கு எப்படியும் வாங்கிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
மதுரவாயல் தொகுதியில் மகனை வேட்பாளராக்குவதற்காக தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் ஒருபக்கம் லாபியில் இறங்கியுள்ளார்.
இந்த களேபரங்களால்தான் காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் பெரும் இழுபறி நீடிக்கிறதாம்.












Click it and Unblock the Notifications