'அம்மா'வுக்கு ரஜினி கடிதம் எழுதியதன் பின்னணி என்ன?
சென்னை: லிங்கா படத்திற்கு பிரச்சனை வராமல் இருக்க ரஜினிகாந்த் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அதிமுக பொதுச் செயலாளருக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதினார். மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்துள்ள அவரை ரஜினி வரவேற்றார்.
இந்நிலையில் இந்த கடித விவகாரம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிடம் அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்,
லிங்கா
கமல் ஹாஸனின் விஸ்வரூபம், விஜய்யின் தலைவா படங்களை போன்று இல்லாமல் தனது லிங்கா படம் எந்த பிரச்சனையும் இன்றி ரிலீஸாக வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார்.
பாஜக
பாஜக அதிமுகவை வெளிப்படையாக விமர்சித்து வரும் நிலையில் ரஜினியை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி செய்கிறது. மேலும் ரஜினி பாஜக தலைவர்களின் நண்பர் என்றும் அந்த கட்சி தெரிவித்து வருகிறது. இதனால் அதிமுகவினர் லிங்கா படத்திற்கு எதிராக பிரச்சனை செய்யலாம் என்று சிலர் ரஜினியிடம் தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம்
ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது அதில் ரஜினி கலந்து கொள்ளாதது அதிமுகவினரை கோபம் அடைய வைத்ததாக கூறப்படுகிறது. இதை எல்லாம் சரி செய்யவே ரஜினி ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக ரசிகர்கள்
மேலும் அதிமுகவினரில் பலர் ரஜினி ரசிகர்கள். அப்படி இருக்கையில் அவர்களை பகைத்துக் கொள்ள ரஜினி விரும்பவில்லை.
அறிவிப்பு
சட்டசபை தேர்தலுக்கு 20 மாதங்கள் இருக்கையில் லிங்கா ரிலீஸுக்கு பிறகு அரசியல் கட்சி துவங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று பலர் ரஜினிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஏன்?
ரஜினி தற்போதே புதிய கட்சியை அறிவித்தால் தேர்தல் வரும் வரை ஆளுங்கட்சியினரின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அதனால் தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பு அறிவிப்பது நல்லது என்று ரஜினிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
லிங்கா
ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை லிங்கா படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.