லைம் லைட்டில் இருப்பதற்காக ராஜா "விரும்பி" இந்த தவறுகளை செய்கிறாரா?
சமீபகாலமாக ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் விரும்பத்தகாத கருத்துகளை பதிவிட்ட வண்ணம் உள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: சர்ச்சைக்குரிய, விரும்பத்தகாத கருத்துகளை எச்.ராஜா பதிவு செய்வதே எப்போதும் லைம்லைட்டில் இருப்பதற்காகத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
சமூகவலைதளங்களை தற்போது பெரும்பாலான பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பகிரப்படும் கருத்துகளை அவரை பின்தொடர்பவர்கள் விமர்சிப்பதும் ஆதரிப்பதும் உண்டு.
இதனால் பொது வெளியில் கருத்துகளை பகிரும் போது சிலர் ஜாக்கிரதையாக இருப்பர். சிலர் தெரியாமல் பகிர்ந்து கொண்டு மற்றவர்களிடம் வாங்கிக் கட்டி கொள்வர். இன்னும் சிலரோ மீடியா வெளிச்சத்தில் இருப்பதற்காகவே சர்ச்சைக்குரிய கருத்துகளை போடுவர். இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்த வகையை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

மெர்சல் பிரச்சினை
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக நடிகர் விஜய் வசனம் பேசும் காட்சிகள் இடம்பெற்றதை எச்.ராஜா , தமிழிசை ஆகியோர் கண்டித்தனர். மேலும் நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பதால்தான் மோடிக்கு எதிராக வசனங்களை பேசியுள்ளார் என்று ஒரு டுவீட் போட்டதுடன் அவரது ஜோசஃப் விஜய் என்று குறிப்பிட்டிருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை தோண்டி எடுத்து போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

தமிழ்த் தாய் வாழ்த்து
சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்திருக்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். ஆனால் தேசிய கீதம் பாடியபோது மட்டும் தியானத்தை கலைத்துவிட்டு எழுந்து நின்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கருணாநிதியை வம்பிழுத்த ராஜா
விஜயேந்திரரின் செயலை நியாயப்படுத்தியதோடு அல்லாமல் ஒரு விழாவில் முதுகு தண்டில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அமர்ந்திருக்கும் படத்தையும் வேறு ஒரு விழாவில் தேசிய கீதத்துக்கு அவர் எழுந்து நிற்கும் படத்தையும் ஒரே நாளில் எடுக்கப்பட்டது போல் போட்டார். இந்த இரு விழாக்களிலும் கலந்துகொண்ட குடியரசு தலைவர்கள் வேறு வேறு இருந்தனர். இதையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து ராஜாவை திட்டியதை காது கொடுத்து கேட்க முடியவில்லை.

எதற்காக இது
சென்னை ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது. இதற்கு ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பையனும் பொண்ணும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை போட்டு, சென்னை ஐஐடியில் தமிழை வளர்த்த போது எடுத்த போட்டோ என்றும் அது ஸ்டாலின் மற்றும் வைகோ கவனத்துக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை ஐஐடி அல்ல
இதற்கு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். எங்கோ முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் 2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை தற்போது சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்டது போல் பொய் கூறி போட்டுள்ளதற்கு ஏராளமான கமென்ட்கள் கொட்டின. இதெல்லாம் எதற்கு என்றே தெரியவில்லை. நெட்டிசன்களே இதன் ஆதி அந்தத்தை புட்டு புட்டு வைக்கும் போது இதை தேடி பிடித்த ராஜாவுக்கு தெரியாமலா இருக்கும்.

பரபரப்பு
இதெல்லாம் தவறு என்று தெரியாமலேயே ராஜா சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இல்லை எப்போதும் பரபரப்பாக லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் ராஜா ஈடுபடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது.












Click it and Unblock the Notifications