சிறைவாசத்தை உணர்ந்து.... முன்கூட்டியே பல நலத் திட்டங்களை அறிவித்த ஜெ.!
சென்னை: வரலாறு காணாத வகையில் தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, விதி எண் 113ன் கீழ் பல நலத் திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டதன் நோக்கம் தற்போதுதான் தெரிய வருகிறது.
அவசரம் அவசரமாக பல துறைகளின் நலத் திட்டங்களையும், புதிய புதிய திட்டங்களையும் அறிவித்தபடி இருந்தார் ஜெயலலிதா. இது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் பெற்றது.
ஆனால் அதுகுறித்து அவர் சற்றும் கவலைப்படவில்லை. மாறாக தொடர்ந்து திட்டங்களை அறிவித்தபடி இருந்தார். இதற்கான உண்மையான காரணம் இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
தான் சிறைக்குச் செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதை சட்ட வல்லுனர்கள் மூலம் அறிந்து கொண்ட பின்னர் தான் திட்டங்களை முன்கூட்டியே அவர் அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
வரலாறு காணாத திட்ட அறிவிப்புகள்
வழக்கமாக அதிக அளவிலான திட்டங்களை அறிவிப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். மாறாக கருணாநிதியோ மற்றவர்களோ இப்படி அதிக அளவில் அறிவிப்புகளை அறிவித்ததில்லை. எனவே வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ஜெயலலிதா என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சோழியன் குடுமி சும்மா ஆடுமா
ஆனால் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல ஜெயலலிதாவின் செயல்பாட்டுக்கும் மறைமுக காரணம் தொக்கி நின்றுள்ளது.
சிறைத் தண்டனை கிடைத்தால்
சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால் குறைந்தது 3 மாதமாவது சிறையில் இருக்க நேரிடும். அப்படி நேரிட்டால், அடுத்து அமையும் அரசால் திறம்பட செயல்படமுடியாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்திருந்தார் ஜெயலலிதா.
திட்டமிட்ட அறிவிப்புகள்
எனவேதான் அதிக அளவிலான திட்டங்களை, அதாவது பட்ஜெட்டில் குறிப்பிட வேண்டிய திட்டங்களைக் கூட சட்டசபையில் விதி எண் 113ன் கீழ் அறிவித்தார் ஜெயலலிதா.
சிறைக்குப் போனால் திட்டங்கள் உயிர் பெறும்
இதன் மூலம் தான் சிறைக்குப் போனாலும் கூட அடுத்து வரும் அரசானது, இந்தத் திட்டங்களை முடுக்கி விட்டு செயல்படுத்தினால் அது மக்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயரையும், தனக்கும் நல்ல பெயரை வாங்கித் தரும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்.
மும்முரமான அடிப்படை வேலைகள்
ஜெயலலிதாவின் பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அடிப்படை வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இது நிறையப் பேருக்கு வெளியில் தெரியாது. தற்போது இந்த பணிகள் இன்னும் வேகம் பெறும் என்று கூறுகிறார்கள்.
ஓபிஎஸ் துறையில்
குறிப்பாக ஓ. பன்னீர் செல்வம் வகித்து வந்த ஒரு முக்கியத் துறையில் அந்தத் துறை தொடர்பான அனைத்துத் திட்டங்களும் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டு வந்ததாக அத்துறயைில் பணியாற்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அதாவது ஜெயலலிதா அத்துறை தொடர்பாக அறிவித்த அனைத்து அறிவிப்புகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. இதற்கான பட்ஜெட்டும் விரைவாக ஒதுக்கப்பட்டிருந்தது.
திருச்சிக்கு முக்கியத்துவம்
அதேபோல ஜெயலலிதாவின் தொகுதி உள்ள ஸ்ரீரங்கம் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறை திட்டங்களையும், அறிவிப்புகளையும் பக்காவாக நிறைவேற்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாம். இதனால் அனைத்துத் துறையினரும் திருச்சி தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிட்டத்தட்ட இரவு பகலாக பணியாற்றி வந்துள்ளனர்.
சனிக்கிழமையும் கூட வேலை
பல துறைகளில் சனிக்கிழமைகளிலும் கூட அதிகாரிகள் பணிக்கு வந்து வேலை பார்த்த சம்பவங்களும் கூறப்படுகின்றன.
சிக்கல் இல்லாமல் 6 மாதத்தை ஓட்டி விடலாம்
இப்படி முன்கூட்டியே சமயோஜிதமாக ஜெயலலிதா திட்டமிட்டு விட்டதால், அடுத்த 6 மாதத்தை அதாவது அடுத்த பட்ஜெட் வரும் வரை ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றியபடியே தற்காலிக அரசை ஓட்டி விடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.