சுதந்திர தினத்தில் மதுவிலக்கு அறிவிப்பு இல்லையே ஏன்? … எதிர்பார்ப்பை புஸ் ஆக்கிய ஜெ…
மதுவிலக்கு வேண்டும் என்று சிறுவர்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க இது பற்றிய முக்கிய அறிவிப்பை ஆகஸ்ட் 15ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரையில் வெளியிட வாய்ப்பு உள்ளது என்று ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. ஆனால் மதுவிலக்கு அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பினை ஜெயலலிதா வெளியிடாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உலா வருகின்றன.
மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசு நினைப்பதால்தான் சுதந்திரதினத்தன்று அதுபற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என்று ஆளும்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து லாட்டரியை முற்றிலும் ஒழித்தது போல சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மதுவிலக்கு அறிவிப்பு முதல்வர் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது.
திமுகவின் எதிர்பார்ப்பு
மதுவிலக்கு பற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டால் அது தனது கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக கொண்டாட தயாரானதாக தெரிகிறது. இதை அறிந்தே சுதந்திரதின உரையில் தவிர்த்து விட்டாராம் ஜெயலலிதா.
மது அரசியல்
எதிர்கட்சியினரின் மது அரசியலை நொடிக்கு நொடி கவனித்து வரும் ஜெயலலிதா, தனது சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றி ஒரு வரி கூட சொல்லாமல் விட்டது அனைவரையும் புஸ் ஆக்கிவிட்டது.
கூல் வைகோ
ஆகஸ்ட் 13ம்தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய வைகோ, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவது பற்றி ஆகஸ்ட் 15ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பூரண மதுவிலக்கு தவிர வேறு எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறினார் வைகோ.
எதிர்பார்க்கவேயில்லை
மதுவிலக்கு பற்றி சுதந்திரதின உரையில் ஜெயலலிதா அறிவிக்கவில்லையே என்று மீண்டும் வைகோவிடம் கேட்டதற்கு நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை ஏமாறவும் இல்லை என்று கூறினார். வைகோவின் இந்த பதிலை மதிமுகவினரே எதிர்பார்க்கவில்லையாம்.
ஸ்டாலின் ஸ்டண்ட்
திமுக பொருளாளர் ஸ்டாலினோ சில தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட முடியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பினார். எனவே சுதந்திர தின உரையில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு வெளியானால் அதை விமர்ச்சிக்கவும் திமுக தயாராக இருந்ததாம்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
இதேபோல ஆகஸ்ட் 13ம் தேதியன்று பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனோ, இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வரின் சுதந்திரதின உரையை முன்வைத்தே கூறினார்.
விஜயகாந்த் ஆலோசனை
தேமுதிக தலைவர் விஜயகாந்தோ முதல்வருக்கு ஆலோசானை கூறும் வகையில் சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது பற்றியும் படிப்படியாக கடைகளையும் குறைக்கலாம் என்று தெரிவித்தார். அக்டோபர் 2ம்தேதியன்று மதுவிலக்கு பற்றிய முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.
கையெழுத்து போராட்டம்
மது ஒழிப்பை வலியுறுத்தி தமாகாவின் ஜி.கே.வாசன் கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். இப்படி எதிர்கட்சிகளின் போராட்டத்தைக் கவனத்தில் கொண்டுதான், மதுவிலக்கு பற்றி அறிவிப்பு எதையும் சுதந்திரதின உரையில் ஜெயலலிதா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன் அறிவிப்பு
மது விலக்கு பற்றி இப்போதே அறிவித்தால் அதை எதிர்கட்சிகள் தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேசி வாக்கு சேகரிக்க தொடங்குவார்கள். எனவேதான் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மதுவிலக்கு பற்றிய முக்கிய அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்கிறது ஆளும் கட்சி தரப்பு
அப்போ இந்த தேர்தலுக்கு பிரியாணி மட்டும்தானா பாஸ்? குவாட்டர் கிடைக்காதா என்பது தொண்டர்களின் மைண்ட் வாய்ஸ்... எது எப்படியோ மது அரக்கன் முற்றிலும் ஒழிந்தால் சரிதான்.