வயது முதிர்வு.. கட்டளையிடாத மூளை.. பேச இயலாத நிலையில் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதியால் இன்னமும் பேச முடியாமல் இருப்பதற்கு மருத்துவ ரீதியாக சில காரணங்கள் கூறப்படுகின்றன.
சென்னை: 94 வது பிறந்தநாளைக் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதியால் பேச முடியாமல் போனதற்கு மருத்துவ ரீதியாக சில காரணங்களை கோபாலபுரத்தில் இருந்து கசிய விட்டுள்ளனர்.
ஜூன் 3ஆம் தேதி 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கருணாநிதி. மேடையில் ஏறி அவர் என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே... என்று சொல்லி விட்டு சில நிமிடங்கள் நிறுத்துவார். தொண்டர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆகும். அந்த குரலை மீண்டும் எப்போது கேட்போம் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் திமுக தொண்டர்கள். கருணாநிதி பொது மேடையில் பேசி 8 மாதங்களுக்கு மேலாக விட்டது.
வயோதிகம் ஒருபக்கம், நோய் பாதிப்பு மறுபக்கம் என திமுக தலைவர் கருணாநிதி கடந்த பல மாதங்களாக வீட்டிற்குள் முடங்கியுள்ளார். அவ்வப்போது அவரது புகைப்படம் மட்டுமே ஊடகங்களில் வெளியாகி தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில்தான் அவரது 94வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு திமுக தயாராகி வருகிறது. சட்டசபையில் அவர் எம்எல்ஏவாக அடியெடுத்து வைத்த வைரவிழா கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மாண்ட விழாவில் கருணாநிதியின் குரல் ஒலிக்கப் போவதில்லை. ஆனால் அவரது முகத்தை மட்டுமாவது பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்குக் கூட அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதுதான் உண்மை.
செயற்கை சுவாசம்
காவேரி மருத்துவமனையில் டிசம்பர் மாதம் இருந்தபோதே, கருணாநிதிக்கு ஆக்சிஜன் செலுத்துவதற்குத் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. டிராக்கியோஸ்டமி எனப்படும் இந்தச் சிகிச்சையின் மூலமாகத்தான் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அப்போது செலுத்தப்பட்டது.
தொடர் சிகிச்சை
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகும் கூட, கருணாநிதிக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. மருத்துவர்கள் கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதி உடல்நிலையைக் கவனித்து வருகின்றனர். கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் இப்போது தேவைப்படுவதில்லை. அவராகவே சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார்.
பேச முடியாத காரணம்
தொண்டையில் நீண்ட நாட்கள் டியூப் போடப்பட்டு இருந்தால் தொண்டைப் பகுதியில் இருக்கும் சதைகள் செயலிழந்து போகும். இது பேச்சுத்திறனை பாதித்துள்ளதாம். அதேபோல கருணாநிதியின் நுரையீரல் வயது முதிர்ச்சி காரணமாக சுருங்கிவிட்டதாகவும், இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு 30 சதவீதமாக மட்டுமே இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூளை சிந்திக்கும் திறனும் குறைய ஆரம்பித்து விட்டதாம்.
செயல் இழந்த நரம்புகள்
மூளையில் இருந்து பேசுவதற்கு தூண்டும் நரம்புகள் செயலிழந்து போய்விட்டதாலும் இப்போது பேச முடியாமல் இருக்கிறார். கருணாநிதி பேசுகிறார், அடையாளம் காண்கிறார் என்று துரைமுருகன் சொன்னாலும், கருணாநிதியால் இன்னும் தொடர்ந்து சரியாகப் பேச முடியவில்லையாம். அதோடு யாராவது அவருக்கு அருகே போய் நின்றால் கூட உடனே அவர்களைப் பார்த்து கருணாநிதியால் அடையாளம் காண இயலாத நிலையில் இருக்கிறாராம்.
வைர விழா நாயகர்
இந்த காரணங்களினால்தான் திமுக தலைவர் கருணாநிதியை வைரவிழா மேடைக்கு அழைத்து வருவதில் சில சிரமங்கள் இருப்பதாக கோபாலபுர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச முடியாவிட்டால் என்ன? 94ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் தலைவர் கருணாநிதிக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்துக்களை பதிவிடுவதோடு பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.