கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீங்களே.. மோடி புறக்கணிப்பால் மூத்த பத்திரிகையாளர்கள் அதிருப்தி
Recommended Video
சென்னை: ராணுவ தளவாட கண்காட்சியைத் துவக்கி வைப்பதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி. இந்த பயணத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைக்கும் வைபவத்திலும் கலந்துகொண்டார் மோடி.
இங்கு, மோடியுடன் பத்திரிகையாளர்களை சந்திக்க வைக்கும் முயற்சியை எடுத்திருந்தார் பாஜகவின் கே.டி.ராகவன்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமலும், தெரிவிக்காமலும் தன்னிச்சையாக இந்த முயற்சியை எடுத்தார் ராகவன்.
ராகவன் முயற்சி
இதற்காக, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமனின் உதவியை நாடியிருந்தார். நிர்மலாவும், " அழைச்சிட்டு வாங்க. சூழல்களுக்கு ஏற்ற மாதிரி சந்திக்க வெச்சிடலாம் " என சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, தமிழகத்தின் சீனியர் பத்திரிகையாளர்கள் பலரையும் குறிப்பாக தனக்கு வேண்டப்பட்ட பத்திரிகையாளர்களை அணுகினார் ராகவன். காவிரி பிரச்சனக்காக கருப்பு சட்டை அணிவது என் கிற மனநிலையில் பத்திரிகையாளர்கள் இருந்ததால், மோடியுடன் சந்திப்பை தவிர்க்க நினைத்தனர். ஆனால், ராகவனோ, பிரதமரிடம் ப்ரஸ் மீட்டுக்கு ஒப்புதல் வாங்கியிருக்கிறேன். உங்களை சந்திக்க அவரும் விருப்பமாக உள்ளார். அதனால், மறுக்காமல் வரவேண்டும் " என வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய பத்திரிகையாளர்கள்
இதனையடுத்து, பிரதமரே விரும்புவதால், மோடியை சந்திக்க சம்மதித்தனர். சம்மதித்த பட்டியலில் பிரபல ஆங்கில, தமிழ் பத்திரிகைகளின் எடிட்டர்களும் அடக்கம். இந்த விசயம் தமிழக பாஜக தலைவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்த நிலையில், அடையாறு புற்றுநோய் மறுத்துவமணைக்கு வந்தார் மோடி. முன்னதாக பத்திரிகையாளர்களையும் வரவழைத்து அமர வைத்திருந்தார் ராகவன். ஆனால், மோடி சென்னைக்கு வந்த நேரத்திலேயே, நிகழ்ச்சி முடிந்த்ததும் பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்து பேட்டி தருகிறார் என செய்திகள் கசிந்தன. அந்தவகையில், தமிழக பாஜக தலைவர்களுக்கும் தெரியவர, அதிர்ந்தனர். கே.டி.ராகவன் ரகசியமாக செய்துள்ளார் என தெரிந்து அவர்களுக்கு அதிர்ச்சி அதிகரித்திருந்தது.
பேட்டி வேண்டாம்
என்ன நடக்கிறது என்று வேடிக்கைப் பார்க்கலாம் என அமைதியாக இருந்தனர். இந்த நிலையில், அடையாறு நிகழ்ச்சி முடிந்ததும் , மோடியை பேட்டி எடுக்கலாம் என ஆர்வமாக இருந்தனர் பத்திரிகையாளர்கள். நிகழ்ச்சி முடிந்ததும், பேட்டி குறித்து அவரிடம் சொல்லப்பட்டது . பேட்டி எதுவும் வேண்டாம் என மோடி சொல்ல, அதிர்ந்துவிட்டனர் நிர்மலாவும், ராகவனும். அதன்பிறகு கெஞ்சிக்கூத்தாடி, பத்திரிகையாளர்களை சந்திக்கவாவது மட்டும் செய்யுங்கள் என வற்புறுத்தியுள்ளதால் பத்திரிகையாளர்களை சந்தித்து வணக்கம் சொன்ன மோடி, சிலரிடம் மட்டும் கைக்குலுக்கிவிட்டு கிளம்பிவிட்டார்.
அதிர்ச்சியில் பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ப்ரஸ் மீட் இருப்பதே மோடிக்கு தெரிவிக்கவில்லை , அது தொடர்பாக முறையாக அவரை அணுகவில்லை என தெரிந்து ராகவன் மீது செம கடுப்பாகிவிட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். இந்த கோபம், தமிழக பாஜக தலைவர்கள் மீது அவர்களுக்குத் திரும்பியுள்ளது. பாஜக தலைவர்களோ, தமிழக பாஜக ஏற்பாடு செய்திருக்கிறதா என அறிந்துகொள்ளாமல், யாரோ ஒருவர் சொல்கிறார்னு எப்படி நீங்கள் நம்பலாம்? இதற்கு நாங்கள் எண்ண செய்வது? இருப்பினும் நடந்த சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என ஸாரி கேட்டுள்ளனர். இருப்பினும் பத்திரிகையாளர்களோ, மோடி தங்களை அவமானப்படுத்தி விட்டதாக அவர் மீது அதிருப்தியடைந்துள்ளனர். இதனை டெல்லிக்கு பாஸ் செய்துள்ளது தமிழக பாஜக தலைமை.