உண்மையான மக்கள் போராட்டங்களை ரஜினி உணர மறுப்பது ஏன்?
உண்மையான மக்கள் போராட்டங்களை ரஜினி உணர மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: உண்மையான மக்கள் போராட்டங்களை ரஜினி உணர மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேசியபோது எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்றார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. நியாயமான கோரிக்கைகளுக்காக மக்கள் போராடுவது கூட கூடாது என்றால் இது சர்வாதிகார போக்கை போல் உள்ளதே என்று பேச்சுகள் நிலவுகின்றன.
எதற்கெல்லாம் போராட்டம்
தமிழகத்தில் போராட்டங்கள் என்று பார்த்தால் டாஸ்மாக்கை மூட கோரி போராட்டம் மிகப் பெரும் போராட்டமாக உள்ளது. டாஸ்மாக்கை அனுமதிப்பதனால் இன்று எத்தனை பெண்களின் தாலி பறிபோயுள்ளது, எத்தனை குழந்தைகள் தகப்பனின்றி பறிதவித்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதில் தவறில்லையே. டாஸ்மாக்கிற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சசிபெருமாளின் போராட்டம் தவறா
மருத்துவம்
குடிநீர் கேட்டும், பஸ் வசதி கோரியும், சாலை வசதி கோரியும் மக்கள் போராடுகின்றனர். குடிநீர் என்பது இன்றியமையாத ஒன்று. இன்றும் கிராமப்புறங்களில் 9 மணிக்கு தொடங்கும் பள்ளிக்கு 20 கி.மீ. தூரம் வரை கூட காலை 7 மணிக்கே நடந்து செல்லும் மாணவர்களை பார்க்க முடிகிறது. மருத்துவ வசதியில்லாமல் இருக்க முடியுமா. ஒரு கிராமத்தில் மருத்துவமனை வசதி இல்லாவிட்டால் அவர்கள் 20 முதல் 30 கி.மீ. தூரம் உள்ள மாவட்ட தலைநகருக்குத்தான் வர வேண்டும் என்ற நிலை உள்ளதே.
நியூட்ரினோ, நெடுவாசல், ஸ்டெர்லைட்
காவிரி நீருக்காக மக்கள் போராடினர். அதுபோல் பூமிக்கு கேடு விளைவிக்கும் நியூட்ரினோ, நெடுவாசல், ஸ்டெர்லைட் உள்ளிட்டவை தங்கள் ஊரில் வேண்டாம் என்று கூறுவது தங்கள் விவசாயத்தை பாதுகாக்கவே அன்றி வேறு எதற்காக. இதுபோல் இன்னும் ஏராளமான போராட்டங்களை மக்கள் தங்கள் உரிமைக்காகவும், அத்தியாவசியத்துக்காகவும்,வாழ்வாதாரத்துக்காகவும் நடத்தி வருகின்றனர். இவற்றையெல்லாம் ரஜினி கொச்சைப்படுத்தினால் எப்படி.
சட்டவிரோதமா
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நியாயமான விலை பொருள் கிடைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் போராடுகின்றனர். காவிரி நீர் இல்லாமல் பயிர்கள் வாடி எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை ரஜினி அவர்கள் காதுக்கு எட்டவில்லையா. அவர்கள் விளைவித்து தரும் சாப்பாட்டையே ரஜினி உள்பட அனைவரும் உண்கிறோம். அப்படியானால் அது சட்டவிரோதமா.
மதிப்பதில்லை
ரஜினி சொல்வைதை போல் சட்ட படி போராடுவோம் என்று வைத்து கொண்டாலும் அதில் சில சிக்கல்கள் உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் அடாவடித்தனம் செய்யும் அண்டை மாநிலங்கள், கோர்ட்டுகளிலும் கூட நமக்கு சாதகமில்லாத பல தீர்ப்புகள். இதையெல்லாம் எதிர்த்துத்தான் மக்கள் வீதிகளில் உழன்று கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பாட்டுக்காகத்தான் இவர்கள் போராடுகிறார்கள். வசதி கேட்டு போராடவில்லை. வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள்.
மக்களை அசிங்கப்படுத்துகிறார்
எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்யக் கூடாது என்றால் போராட்டங்களை நடத்த காரணமாக இருக்கும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து பேசமாமல் இருப்பது ஏன். அதை செய்யாமல் உயிரைக் கொடுத்து போராடும் மக்களை அசிங்கப்படுத்துவது எந்த வகையில் நியாயம். போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றால் டாஸ்மாக், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நெடுவாசல் ஆகிய திட்டங்களை அனுமதித்தாலும் தமிழகம் சுடுகாடாகும். விவசாய இல்லாமல் போனாலும் உணவின்றி பட்டினிக் கிடக்க நேரிடும். எனவே ரஜினி நியாயமான உண்மையான தூய்மையான அரசியலை தர நினைத்தால் மட்டும் போதாது, மக்களின் நியாயமான போராட்டங்களையும் உணர வேண்டும்.