"குட்டிப்பையா"... ஜெ.வைப் பார்த்து கதறிய சசிகலா.. கடைசி நிமிட பரபரப்புகள்!
ஜெயலலிதாவைப் பார்த்து கடைசி நேரத்தில் குட்டிப் பையா எழுந்திரி என சசிகலா கதறியது ஏன் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை: ஜெயலலிதா மரணமடைந்தபோது சசிகலா 'குட்டிப்பையா எழுந்திரி' என கத்தியதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைதானாம். இப்படி ஜெயலலிதாவை சசிகலா அழைப்பதற்கான காரணமும் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நெருக்கமான தோழியாக இருந்தவர் சசிகலா. அரசியல் ரீதியான பிரச்சனைகளில் 2 முறை சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார்.
சசியை சார்ந்த வாழ்க்கை
ஆனால் சசிகலாவை மட்டும் திரும்ப திரும்ப ஜெயலலிதா சேர்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் சசிகலாவை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாராம் ஜெயலலிதா.
பெங்களூரு சிறைவாசம்...
என்னதான் வீட்டில் பணியாளர்கள் இருந்தாலும் ஆச்சாரமான ஜெயலலிதா சசிகலாவை மட்டுமே தமக்கு நெருக்கமானவராக வைத்துக் கொண்டாராம். அதுவும் பெங்களூரு சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதாவின் உடல்நிலை முழுமையாக பாதிக்கப்பட்டதாம்.
நீதான் எனக்கு தாய் மாதிரி...
அப்போதெல்லாம் என்னை ஒரு தாய்போல நீதான் பார்த்துக்கிற... உன்னை தாண்டி என்கிட்ட யாருமே வர முடியாது என உருக்கமாக சசிகலாவிடம் ஜெயலலிதா கூறியிருந்தாராம். பெங்களூரு சிறைவாசத்துக்குப் பின்னர் போயஸ் கார்டன் பங்களாவில் சசிகலாவை முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டார்.
குட்டிப் பையா
இதனால் ஜெயலலிதாவை செல்லமாக குட்டிப் பையா என சசிகலா அழைப்பது உண்டாம். அந்த வார்த்தையைத்தான் ஜெயலலிதா மறைந்தநேரத்தில் அப்பல்லோவில் சசிகலா உச்சரித்தாராம் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.