சசிகலாவை முதல்வராக்க அமைச்சர்கள் படுமும்முரம்- அதிமுக தொண்டர்கள் 'ஷாக்'
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை வீழ்த்தி விட்டு தற்போது சசிகலாவை முதல்வராக பல அமைச்சர்கள் முயற்சி செய்து வருவது அதிமுகவில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென்று அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் அவர் பதவி ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி வருகிறார்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதில் தவறேதும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஓபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தை பொங்கலில் பதவியேற்பு ?
கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என்றுதான் தற்போது மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அந்தத் தீர்மான நகலுடன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை வழங்கி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக மட்டுமின்றி, தமிழக முதல்வராகவும் சசிகலா வருகிற தைப் பொங்கலுக்குப் பிறகு பதவியேற்கலாம் எனத் தெரிய வருகிறது.
ஜெயலலிதா சமாதியில் தீர்மானம்
இந்நிலையில், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். அங்கு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பதுடன் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்போது அதில் போட்டியிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தியாகத்தின் வடிவம்
புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சின்ன அம்மா சசிகலா. அவர் தியாகத்தின் வடிவமாக திகழ்ந்து வருகிறார். 1 கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சசிகலா விளங்குகிறார். அவர் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் காட்டும் வழியில் விசுவாசத்துடன் அரசியல் பயணம் தொடருவோம்.
ஆட்சியை வழி நடத்த வேண்டும்
சின்ன அம்மா அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி சின்ன அம்மா சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதல்வராகவும் ஆக வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
ஒத்துழையாமை இயக்கம்
கங்கா சந்திரமுகி அறைக்கு போனா.... சந்திரமுகியா நின்னா... நடந்தா... இப்போ முழுசா சந்திரமுகியா மாறிட்டா... புரிஞ்சவன் பிஸ்தா... இதுதான் இப்போது வாட்ஸ் அப்பில் வைரல் ஆகிறது. போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர்ந்த வி.கே. சசிகலா, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர விரும்பினார். அது மட்டும் போதுமா? தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் நன்றாக இருக்குமே என்று யார் சொன்னார்களோ இப்போது ஓபிஎஸ்க்கு எதிராக சில அமைச்சர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர். இது அதிமுவிற்கு நல்லதா? கெட்டதா?