மல்லையாக்களுக்குத் தாராளம் காட்டும் வங்கிகள். 60% வட்டியில் கடன் வாங்கும் அவலத்தில் தமிழக விவசாயிகள்
சென்னை: தமிழக விவசாயிகள் 60 சதவீதம் அளவில் வட்டிக்கு கடன் பெற்று விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கள ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. வங்கிகளின் அசாத்திய காலாதாமதமும், கடன் தர மறுப்பு தெரிவிப்பதும் இதுபோல விவசாயிகள் அல்லல்பட காரணம்.
சிறு, குறு விவசாயிகளுக்கு, வங்கிகளிடமிருந்து, கடன் கிடைப்பது அதுவும் உரிய நேரத்திற்குள் கிடைப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. இதை ஹார்வார்ட் கென்னடி ஸ்கூல் மற்றும் டூக் பல்கலைக்கழகம் நடத்திய கள ஆய்வு உறுதி செய்துள்ளது.
1 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள் என்றும், 2 ஹெக்டேர் வரையெனில் அவர்கள் குறு விவசாயிகள் எனவும், 4 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் செமி-நடுத்தர விவசாயிகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 2011-12 கணக்கெடுப்புபடி, இந்தியாவில் இதுபோன்ற விவசாயிகள் எண்ணிக்கைதான் மிக அதிகம். 95.1 சதவீதம் இப்படியான சிறு விவசாயிகள்தான் உள்ளனர்.
பெரிய விவசாயிகள்
10 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகள் மற்றும், அதற்கும் அதிக பரப்பிலான நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகள் 4.9 சதவீத அளவில்தான் உள்ளனர். இவர்களுக்கு கடனுதவி கிடைப்பதில் பெரிய சிக்கல் இல்லை.
மழை பொழிவு
ஒருபக்கம் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்றால், மற்றொருபுறம், மழை பொழிவில் மாறுபட்ட நிலை இருப்பதும் விவசாயிகளுக்கு இடையூறான விஷயமாகும். நதி நீரை சரியாக பயன்படுத்தாமல், வானம் பார்த்த பூமியாக மாற்றிவிடப்பட்டுள்ள தமிழகத்தில் இந்த நிலை இன்னும் மோசம்.
விவசாய காலத்திற்கு முன்பு
'இந்தியா ஸ்பென்ட்' அமைப்பு தமிழகத்தில் நடத்தியுள்ள ஆய்வில், ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவசாய காலம் தொடங்கும்முன்பாக, 71.61 சதவீத விவசாயிகள் வங்கி உள்ளிட்ட முறைப்படுத்தப்பட்ட மூலங்களில் இருந்து கடனை பெறுகிறார்கள். 28.39 சதவீதம் விவசாயிகள்தான் முறைப்படுத்தப்படாத கடன்களை நாடுகிறார்கள்.
விவசாய காலத்தின் போது
விவசாய பணிகள் ஆரம்பித்த பிறகு கடன் வாங்கும் விவசாயிகளோ, அதிகப்படியாக அதாவது 65.41 சதவீதம் முறைப்படுத்தப்படாத நிதி மூலங்களில் இருந்தே கடன் பெறுகிறார்கள். கந்து வட்டி உள்ளிட்டவை இதில் அடங்கும். 34.59 சதவீதம் பேர் மட்டும் முறைப்படுத்தப்பட்ட அமைப்புகளில் கடன் பெறுகிறார்கள்.
பம்பு செட்டு வாடகை
2015-16ம் ஆண்டில் 'இந்தியா ஸ்பென்ட்' நடத்திய ஆய்வின்போது, வங்கிகளில் கடன்பெற விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்தது. பருவமழை தாமதமாக வந்ததுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பருவமழை தாமதமானால், பம்பு செட்டுகளை வாடகைக்கு வாங்கி நீர் பாசனம் செய்ய விவசாயிகள் தள்ளப்படுவதால் உடனே அவர்களுக்கு கடன் தேவைப்படுகிறது. வங்கிகள் தாமதம் செய்வதால் வேறு நிதி மூலங்களை நாடுகிறார்கள் என்பது அந்த ஆய்வு சொல்லும் பாடம்.
60 சதவீத வட்டி
மழை பொய்க்கும் இதுபோன்ற அவசர சூழ்நிலையில், விவசாயிகள் ஆண்டுக்கு 60 சதவீதம் என்ற சராசரி வட்டியில் கடன் பெறுகிறார்கள் என்கிறது இதே ஆய்வு. மழை பொழிவு பொய்த்த பிறகு வங்கியில் சென்று கடன் பெற்று பயிர்களை காப்பாற்றுவது முடியாமல் போவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். காரணம், வங்கிகளின் அலாதியான கால தாமதம் மற்றும் கடன் மறுப்பு.
கந்து வட்டிக்காரர்கள்
முறைப்படுத்தப்படாத நிதி மூலங்களில் இருந்து பெறப்படும் கடனில், வட்டிக்கு கடன் தருவோர்தான் 68 விழுக்காடாக உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 30 சதவீதம் கடன் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடமிருந்து பெற்றப்பட்டதாக உள்ளது என்கிறது அந்த ஆய்வு. 2 சதவீதம் விவசாயிகள் கடைக்காரர்களிடம் கடன் வைத்துவிட்டு இடு பொருள் வாங்கிக்கொள்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
நடுத்தர விவசாயிகள் பரவாயில்லை
அதிகப்படியாக இதுபோல கடன் வாங்குவது சிறு விவசாயிகள்தான். 82.2 விழுக்காடு சிறு விவசாயிகள் முறையற்ற மூலங்களில் இருந்து கடன் பெறுகிறார்கள். குறு விவசாயிகளில்70.4 சதவீதம் பேரும், செமி-நடுத்தர விவசாயிகளில் 73.5 சதவீதம் பேரும் இவ்வாறு கடன்பெறுகிறார்கள். ஆனால், நடுத்தர விவசாயிகளில் 46.2 சதவீதம் பேர்தான் முறையற்ற இடங்களில் கடன்பெறுகிறார்கள்.
காரணங்கள்
ஆய்வில் கிடைத்த தகவல்படி, சிறு விவசாயிகள் பெறும் கடன் சராசரி 8643 ரூபாய். 60 சதவீத வட்டி என்றபோதிலும் உடனே கிடைப்பது, ஆவணங்கள் தேவையில்லாதது, வீட்டுக்கே பணம் வந்து சேருவது போன்றவை முறையற்ற மூலங்களில் இருந்து விவசாயிகள் கடன் பெற காரணம்.