மதிமுக வேட்பாளருக்குப் பொன்னாடை போர்த்தி கவிழ்ந்த அதிமுகவின் தமிழ்மகன் உசேன்!
நெல்லை: பாளையங்கோட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் தமிழ்மகன் உசேன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். மதிமுக வேட்பாளர் கே.எம்.ஏ நிஜாமுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறியதாலேயே தமிழ்மகன் உசேன் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. கடந்த 4ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஜெயலலிதா. இதில் பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே உள்ள புலிமாங்குளம். தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வருகிறார்.
இவர் உருது மொழி பேசக் கூடியவர் என்பதால் மேலப்பாளையம் முஸ்லிம் ஓட்டுகள் இவருக்கு கிடைக்காது என்றும், இதனால் நெல்லை பாளையை சேர்ந்த ஒருவரை அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்தி வந்தனர்.
தமிழ் மகன் உசேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்றே அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல போராட்டங்களையும் நடத்திய நிர்வாகிகள், தமிழ்மகன் உசேனுடன் பிரசாரத்துக்கு செல்லாமல் நெல்லை தொகுதிக்கு சென்று விட்டனர்.
பாளை வேட்பாளர் தமிழ்மகன் உசேனை மாற்ற கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் பாளையங்கோட்டை மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதில் தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமற்ற தமிழ்மகன் உசேனை மாற்றினால் பாளையங்கோட்டை ஜெயலலிதா கோட்டையாகும். வெளியூர் வேட்பாளரை மாற்றி உள்ளூர் வேட்பாளரை அறிவித்தால் அம்மாவுக்கே வெற்றி என குறி்ப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றப்பட்டாலும் தமிழ்மகன் உசேனை மற்றும் மாற்றவில்லை. இந்த நிலையில் 7வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் இன்று மாற்றப்பட்டுள்ளனர். அதில் தமிழ்மகன் உசேனை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக எஸ்.கே.ஏ.ஹைதர் அலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏன் இந்த திடீர் மாற்றம் எனில், மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எம்.ஏ நிஜாம் நேற்று மாலையில் தொகுதிக்கு வந்த போது மதிமுகவினரால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவீரன் ஒண்டிப்புலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக காரில் சென்ற தமிழ் மகன் உசேன், காரை நிறுத்தச் சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்து நிஜாமுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். பதிலுக்கு நிஜாமும் பொன்னாடை போர்த்திவிட்டு வாழ்த்து தெரிடிவித்தார்.
இந்த செய்தி காரில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மூலம் கட்சித்தலைமைக்கு எட்டியதை அடுத்து தமிழ்மகன் உசேனை மாற்றிவிட்டு ஹைதர் அலியை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த மாதம் போயஸ்கார்டனில் நடைபெற்ற வேட்பாளர்கள் நேர்காணலின் போது அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், சிறுபான்மையினர் பிரிவு செல்வராஜ் ஆகிய 3 பேர் மட்டுமே நேர்காணலின் போது உடன் இருந்தனர். இதன் மூலம் எம்.ஜி.ஆர் மற்றத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்மகன் உசேன் மாற்றப்பட்டுள்ளார்.
தொகுதியில் எதிர்ப்பு இருந்தாலும் அவரை மாற்றாமல் இருந்தார் ஜெயலலிதா, ஆனால் மதிமுக வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி இப்படி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டார் தமிழ்மகன் உசேன் என்கின்றனர் அதிமுகவினர். வேட்பாளர் மாற்றப்பட்டதால் பாளையங்கோட்டை தொகுதி அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.