ரஜினி- கமல் என்றாலே.... அரசியல் கட்சியினர் வியர்த்து விறுவிறுப்பதேன்?
ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக கூறினாலே தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு வியர்த்து விறுவிறுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருகின்றனர் என்ற உறுதி செய்யப்படாத செய்திகளை கேட்டவுடன் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மனம் படபடக்கிறது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கு மாற்றாக வேறு ஒரு கட்சியை மக்களும் அங்கீகரிப்பதில்லை. இதனால் இதர கட்சிகள் ஓரிரு சீட்டுகளுக்காக இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
மாபெரும் ஆளுமைகள்
ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாபெரும் ஆளுமைகளாக கருதப்படுகின்றனர். அவர்களில் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல்நல குறைவால் அவர் உயிரிழந்துவிட்டார். கருணாநிதியோ முதுமை காரணமாக அவர் அரசியலில் நேரடியாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் வெற்றிடம்
இதனால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள மற்ற கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தற்போது தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது. எதற்கெடுத்தாலும் ஊழல், லஞ்சம் என உள்ளது.
ரஜினி- கமல்
தமிழகத்தில் ஊழலும்,லஞ்சமும் தலைவிரித்தாடுவதும், தங்கள் பதவியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்கு துரோகம் இழைப்பதும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. மேலும் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, லஞ்ச லாவண்யமற்ற அரசு அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை தற்போது உள்ள கட்சிகளிடம் எதிர்பார்ப்பது சிரமம் என்பதால் அவர்களாகவே களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
மறைமுக அறிவிப்பு
அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியும், கமலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் சில கட்சிகள் வியர்த்து விறுவிறுக்கின்றன. இவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டாலும், நமக்கு கிடைக்கும் ஓரிரு சீட்டுகளும் போய்விடுமே என்று தேசிய அளவில் பெரியதாக இருந்தாலும் தமிழகத்தை பொருத்தமட்டில் சிறிய கட்சி உள்பட உதிரி கட்சிகள் அனைத்தும் எதிர்க்கின்றனர்.
நடிகர் வரக் கூடாதா
நடிகர் விமர்சிப்பதா, நடிகர் அரசியலுக்கு வருவதா, இப்போது ஏன் ஞானோதயம் என்று மாறி மாறி கேள்வி கேட்பது அவர்களின் பயத்தை வெளியே காட்டுகிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் இத்தகைய கேள்விகள் ஏன். ரஜினியோ, கமலோ, விஜய்யோ, அஜித்தோ யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தால் ஒதுங்கிவிட்டு வேலையை பார்க்காமல் வருவதற்கு முன்னரே தடை போடுவது ஜனநாயகமல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். லஞ்ச, லாவண்யமற்ற அரசை உங்களால் தர முடியவில்லை எனில் தருவோருக்கு வழி விட வேண்டுமே தவிர வியாக்கியானம் பேசக் கூடாது. ரஜினியோ , கமலோ, அல்லது இருவரும் சேர்ந்தே அரசியலுக்கு வந்தாலும் சரி அவர்களுக்கான மக்கள் ஆதரவால் எங்கே நம் பிழைப்புக்கு வேட்டுவந்துவிடுமோ என்று படபடப்பில் வாய்க்கு வந்தபடி கூறுகின்றனர்.