எதற்காக இந்த சித்து விளையாட்டு.. தமிழக மக்கள் அவ்வளவு கேவலமாக போய் விட்டார்களா??
சென்னை: தமிழக மக்களுக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு அரசு தற்போது நடந்து வருகிறது. நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசுதான். ஆனால் யாரை நம்பி ஓட்டுப் போட்டோமோ அவரே போய் விட்டார். ஆனால் அவரது பெயரை வைத்துக் கொண்டு கோமாளித்தனம் செய்து வரும் ஆட்சியாளர்களைப் பார்த்தும், அவர்களை ஆட்டுவிக்கும் சக்தியின் ஆதிக்கத்தை நினைத்தும் மக்கள் வெதும்பிக் கொண்டுள்ளனர்.
மக்களுக்கான அரசாக இல்லாமல் முழுக்க முழுக்க சுயநலத்தை மட்டுமே இந்த ஆட்சி கவனம் கொள்கிறது. கோஷ்டி கோஷ்டியாக செயல்படுகிறார்கள். மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். மக்களைப் பற்றி கவலையே படவில்லை. மிகப் பெரிய அளவில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாக பேச்சு அடிபடுகிறது. இடமாற்றம் உள்ளிட்ட எல்லாமே காசுதானாம்.
இப்படிப்பட்ட ஒரு அரசை ஏன் மத்திய அரசு இதுவரை விட்டு வைத்திருக்கிறது என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது. முழு நேர ஆளுநரையும் நியமிக்காமல் மத்திய அரசு நடந்து கொள்வதைப் பார்த்தால் அந்த அரசுக்கும், இந்த கோமாளித்தனங்களில் உடன்பாடு உள்ளதா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.
குற்றவாளி தலைமையில்
தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக ஆட்சி கிட்டத்தட்ட மியூசிக்கல் சேர் போல மாறி விட்டது. குற்றவாளி ஒருவரை தலைவராக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். அந்த குற்றவாளி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராம்.
லஞ்சம் கொடுத்தவர் து.பொ.செவாம்
சரி அடுத்த நிலையில் இருப்பது யார் என்று பார்த்தால் அவர் பெரா கேஸில் சிக்கியவர். தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார்.
முதல்வர் யார்!
சரி இது கட்சி விவகாரம். ஆட்சி சரியா இருக்கா என்று பார்த்தால் அங்கும் பெரும் குழப்பம். எடப்படி அரசுக்கு எதிராக அவ்வப்போது ஏதாவது கோஷ்டி கிளம்பி முதல்வருக்கு எச்சரிக்கை விடுகிறது. கூடிக் கூடிப் பேசுகிறார்கள். அமைச்சர்கள் தலைமையில் இவர்கள் அடிக்கடி ஆலோசனை நடத்துவதால் எப்போதும் ஒரு விதமான பதட்டம் நிலவுவதை காண முடிகிறது.
சட்டசபைக் கூட்டம்
சட்டசபையைக் கூட இவர்கள் முடக்கி வைத்து விட்டனர். எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்பியதும், சபாநாயகரிடம் போய் புகார் கொடுத்த பிறகுதான் அதுகுறித்துப் பேசி கூட்டத்தை நடத்தும் முடிவை எடுக்கின்றனர்.
ஏன் இவ்வளவு மோசமான நிலை
இப்படி அவருக்குப் பயந்து இவர், இவருக்குப் பயந்து அவர் என்று தான் ஆட்சியாளர்கள் உள்ளனரே தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு நடவடிக்கையையும் காண முடியவில்லை. மக்களுக்கான ஆட்சியாக இது இல்லை. கோஷ்டிகளின் ஆட்சியாக இது மாறி விட்டது.
எம்.எல்.ஏக்கள் குறை தீர்ப்பு
மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய முதல்வர் அதுதொடர்பான முகாம்களை நடத்தலாம். ஆனால் 3 நாட்கள் தனது கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்து அவர்களது குறைகளைப் போக்கப் போகிறாராம். என்ன கொடுமை பாருங்கள்
முழு நேர ஆளுநர் என்னாச்சு
மத்திய அரசு இந்த கோமாளித்தனங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு முதலில் முழு நேர ஆளுநரை நியமிக்க வக்கில்லாத அரசாக மத்திய அரசு இருப்பது மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. வேண்டும் என்றே இதில் மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம்தான் வலுத்து வருகிறது.
பார்ட் டைம் ஆளுநர்
பார்ட் டைம் ஆளுநர் எப்போதாவதுதான் சென்னை வருகிறார். அவசர ஆத்திரத்திற்கு அவரைப் பார்க்க முடியாத நிலை. தேவைப்பட்டால் மும்பைக்குப் போய்த்தான் பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. முழு நேர ஆளுநராக இருந்தால் அரசின் நடவடிக்கைகளை அருகே இருந்து கண்காணிக்க முடியும். ஆட்சியாளர்களும் ஆளுநர் இருக்கிறாரே என்ற உணர்வுடன் செயல்படுவார்கள்
எதிர்க்கட்சிகளும் சரியில்லை
தமிழகத்தில இப்படி ஆளுக்கு ஒரு கோஷ்டியாக பிரிந்து, சுயநலத்துடன் பேரம் பேசுவது, ஸ்திரமற்ற ஆட்சியை நடத்துவது என்று அநியாயம் நடக்கையில் எதிர்க்கட்சிகளும் இதை பெரிதாக கண்டு கொண்டது போலத் தெரியவில்லை. ஒப்புக்கு ஏதாவது அறிக்கை விடுகிறார்கள், கருத்து கூறுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள், அவ்வளவுதான்.
ஏன் இந்த சித்து விளையாட்டு
இந்த அரசை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்காமல் எடுப்பார் பிள்ளையாக்கி ஆளாளுக்கு விளையாடி வருகிறார்கள். இது முற்றிலும் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமான செயல். மக்கள் தெருத் தெருவாக போராடி வரும் நிலையில் இந்த சித்து விளையாட்டு ஏன்.. மக்கள் என்ன அவ்வளவு கேவலமாக போய் விட்டார்களா இவர்களுக்கு என்ற கேள்விதான் எழுகிறது.