சட்டசபை வளாகத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்? துரைமுருகன் கேள்வி
சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளனர்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:-
சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்று கேட்டார்.
சபாநாயகர்: சட்டமன்ற உறுப்பினர்களின் நலன் கருதியே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துரைமுருகன்: இதற்கான அவசியம் என்ன என்பதை பேரவை மூலம் தெரிந்து கொள்வதற்காகவே பாதுகாப்பு ஏற்பாடு பற்றி கேட்கிறேன்.
சபாநாயகர்: உங்களுக்கும், எனக்கும், சபையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காகவே போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்.
துரைமுருகன்: பாதுகாப்பை வரவேற்கிறேன், அளவுக்கு அதிகமான, திடீர் கெடுபிடிக்கு என்ன காரணம்?
அதைத் தொடர்ந்து துரைமுருகன் பேசியது, சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: பாதுகாப்பு நலன் கருதி, போலீஸ் அதிகாரிகள், அவர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்; அதை குற்றம் என்று கூற முடியாது. டெல்லி செல்லும்போது, விமான நிலையத்தில், சோதனை செய்வதில்லையா? தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., ஆட்சியில், மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரி பெற்றீர்கள். அதற்காக, உங்கள் ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்று எடுத்து கொள்ளலாமா?
சபாநாயகர்: இதற்கு மேல் விவாதம் வேண்டாம்
இப்பிரச்னையை விடுங்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.