ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா.. முன்னணி நடிகர்களுக்கு விருது வழங்காத தமிழக அரசு.. பரபர பின்னணி
சென்னை: தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் முன்னணி நடிகர்கள் யாரும் தேர்வாகவில்லை.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மொத்தமாக 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை தமிழக அரசு நேற்று அறிவித்தது.
சிறந்த நடிகர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டது. 2009- கரண்; 2010- விக்ரம், 2011- விமல், 2012 ஜீவா, 2013- ஆர்யா 2014- சித்தார்த் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதில் புறக்கணிப்பு
இதில் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகிய தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களை கொண்ட ஆதர்ஷ நாயகர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக இப்படி யாராவது ஒருவருக்கு விருதுகள் கிடைக்கும்.
படங்கள்
2009ஆம் ஆண்டின் சிறந்த படமாக 'பசங்க', 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'மைனா', 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'வாகை சூட வா', 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 'வழக்கு எண் 18/9', 2013ஆம் ஆண்டு சிறந்த திரைப்படமாக 'ராமானுஜன்', '2014ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 'குற்றம் கடிதல்' அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் இல்லை
மேற்கண்ட சிறந்த படங்கள் அறிவிப்பிலும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவுமே இல்லை. இது யதேர்ச்சையாக நடந்தது போல தெரிியவில்லை. ஏனெனில் இக்காலகட்டத்தில் பெரிய நடிகர்கள் நடிப்பில் வெளியான பல படங்கள் நடிப்புக்காகவும், கதையம்சங்களுக்காகவும் பேசப்பட்டவைதான். ஆனால் அவர்கள் நடித்த படங்களுக்கோ அவர்களுக்கோ விருதுகள் இல்லை.
ஆட்சியாளர்கள் கோபம்
அதிமுக அரசை கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை புறக்கணித்துள்ளனர். ஆனால் ரஜினியோ கழுவும் மீனில் நழுவும் மீனாகத்தான் அதிமுகவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார். இருப்பினும் சிஸ்டம் சரியில்லை என சமீபத்தில் அவர் பேசியது ஆட்சியாளர்களை கோபப்படுத்தியுள்ளது. மேலும் அவர் அரசியலில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல்களும் எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது. எனவே தவிர்த்துள்ளனராம்.
மிக்சர் சாப்பிடுகிறோம்
இதேபோலத்தான், விஜய், ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக ஆக்ரோஷமாக வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். மேலும் மெர்சல் படத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி நடிக்கிறார். விஜயும் அரசியல் ஆசையில் இருப்பதாக தமிழக அரசு கருதுகிறது. எனவே அவரையும் புறம் தள்ளியுள்ளது. இதேபோல சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓ.பி.எஸ் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டபோது "இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம்தான் மக்களே" என சூர்யா டிவிட் செய்து அரசு கோபத்தை வாங்கிக்கட்டியுள்ளார்.
போதும்ப்பா
அஜித், தனுஷ், விக்ரம் போன்றோர் அரசை கோபப்படுத்தியதில்லை என்றபோதிலும், பெரிய நடிகர்களை வளர்த்துவிட்டால் நமக்கே குடைச்சல்தான் கொடுக்கிறார்கள் என்ற கடுப்பில் அரசு இவர்களையும் தவிர்த்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.