இதைவிட ஒரு கொடுமை இருக்க முடியுமா.. தமிழக மாணவர்கள் எதிர்காலம் யாரிடம் சிக்கியுள்ளது பாருங்கள்?
சென்னை: அடுக்கடுக்கான புகார்கள், அதுவும் நாடே எட்டிப் பார்த்து சிரிக்கும் அளவுக்கான மோசடி புகார்கள், அப்படியிருந்தும் அமைச்சராக தொடர்கிறார் விஜயபாஸ்கர். அவர் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுத் தந்துவிடுவார் என காத்திருக்கும் நிலையில்தான் தமிழகம் உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அதில் பல ஊழல்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய டைரியும் உண்டு.
இதுதொடர்பாக, விஜயபாஸ்கரிடம் பல தடவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
விஜயபாஸ்கர் சொத்துக்கள்
சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறிப்போனார் விஜயபாஸ்கர். இதையடுத்து விஜயபாஸ்கர் குடும்பத்துக் சொந்தமான 100 ஏக்கர் நிலங்கள், குவாரிகள் உள்ளிட்ட சொத்துகள் நேற்று முன்தினம் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. குவாரியில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்துள்ளார் என்றும் வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கிறது.
மாமூல் வசூல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மாமூல் வசூல் பட்டியலில், ஒரு மாத ஊழல் பணம் வசூல் மட்டும் 5.16 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரொக்கமாக வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் மட்டுமே ஏறக்குறைய 5 கோடி ரூபாய். அவரிடமிருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக கைப்பற்றப்பட்ட பட்டியலின் மொத்த மதிப்பு ரூபாய் 89 கோடி.
குட்கா கொடுமை
இதைவிட வேறு ஒரு பெரும் கொடுமையும் உள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்காவை தாராளமாக விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் கமிஷனர்களாக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் வாங்கியதாக வருமான வரித்துறை சுட்டிக்காட்டியது. குட்காவை அதிகமாக பயன்படுத்துவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான். மாணவர்கள் வாழ்க்கையை, வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தும் குட்கா போன்ற ஒரு போதை பொருளை சட்ட விரோதமாக விற்பனை செய்ய அனுமதி வழங்கியவர் என குற்றம்சாட்டப்பட்டவர்தான் விஜயபாஸ்கர். ஆனால், அவர்தான் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத்தரப்போகிறேன் பேர்வழி என்று, டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
மாணவர்கள் நிலை
விஜயபாஸ்கர் எடுக்கும் முயற்சிகளின் அடிப்படையில்தான் தமிழக மாணவர்கள் எதிர்காலம் உள்ளதாம். இது எத்தனை பெரிய நகைமுரண். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டியவர், விசாரணைக்கு உள்ளாக வேண்டியவர், வருங்கால தூண்களான மாணவர் நலனுக்கான லகானை கையில் வைத்துள்ளதுதான் தமிழகத்தின் தலையெழுத்து. எதிர்க்கட்சிகள் முதல், ஊடகங்கள் வரை எத்தனையோ நெருக்கடிகளை கொடுத்தும் கூட விஜயபாஸ்கர் பதவியில் கை வைக்க பயந்து நடுங்குகிறார் முதல்வர் எடப்பாடியார். காரணம் என்ன என்று அறிவிக்காமலேயே, மாதம் இரு அமைச்சர்களை தூக்கி பந்தாடிய ஜெயலலிதா அமர்ந்த, அந்த இருக்கையில் அமர்ந்த ஒரே காரணத்திற்காகவாவது விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியை பறித்துவிட்டு விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் எடப்பாடியார் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.