அதிமுகவில் இருந்து சசிகலா,தினகரனை நீக்க முடிவு? ... எடப்பாடி ஆலோசனையின் பரபர பின்னணி!
அதிமுகவில் இருந்து சசிகலாவையும், தினகரனையும் நீக்கினால் ஏற்படும் சாதக பாதங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி அதிமுகவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை : அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை நீக்குவதாக அறிவித்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படுமா என்று முதல்வர் பழனிசாமி கட்சியினருடன் விவாதித்து வருகிறார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்லும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில் அதிமுக அமைச்சர்கள் மட்டுமின்றி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம்எல்ஏவும் பங்கேற்றுள்ளார். எனவே ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனை அதிகம் திட்டாமல் சற்றே அடக்கி வாசிக்கிறார்களாம்.
இதனிடையே அதிமுகவின் இரு அணிகள் இணையத் தடையாக இருப்பது சசிகலா, தினகரன் கட்சியில் இருப்பது மட்டுமே என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர். எனவே இன்றைய கூட்டத்தில் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவையும், அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனையும் நீக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கட்சியினர் மத்தியில் பரவலாக இந்த கருத்து நிலவிய நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளர் வெற்றிவேலும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
எனவே சசி,தினகரனை நீக்குவது பற்றி விவாதம் நடந்தால் தினகரன் ஆதரவாளர்கள் கலாட்டாவில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications