திமுகவில் மீண்டும் ஐக்கியமாகும் அழகிரி: தென்மண்டல அமைப்புப் செயலாளர் பதவி தர முடிவு
சென்னை: சட்டசபை தேர்தலில் வென்றாக வேண்டும், காணாமல் போய்க் கொண்டிருக்கும் திமுகவை கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் லகானை கையில் எடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள மூத்தமகன் அழகிரி கண்கள் பணிக்க, இதயம் இனிக்க மீண்டும் கட்சியில் ஐக்கியமாகும் சூழ்நிலை வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் திமுகவினர்.
அழகிரி, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதும், பின், கட்சியில் சேர்க்கப்படுவதும் தி.மு.க.,வில் சகஜம் என்றாலும், அழகிரியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் கட்சியின் மாறாத வரலாறு!
முரசொலிக்கு வந்த மூத்தவர்
சென்னையில் இருந்து, முரசொலி பதிப்பை கவனிப்பதற்காக மதுரை வந்த அழகிரி, முதலில் கட்சியில் எவ்வித தொடர்பும் இல்லாமல் தான் இருந்தார். பொன்முத்துராமலிங்கம், காவேரிமணியம், உள்ளிட்ட பிரமுகர்களிடம் மட்டும், முதலில் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
முதல் போராட்டம்
எம்.ஜி.ஆர்., ஆட்சியில், மதுரையில் பிரதமர் இந்திராவுக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டபோது, கருணாநிதி உட்பட தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரையில் போராட்டம் நடந்தது. இதுதான், அழகிரி பங்கேற்ற முதல் போராட்டக்களம்.
அடையாளம் காணப்பட்ட அழகிரி
1993 ல் ம.தி.மு.க., உருவான போது, பொன் முத்துராமலிங்கம் உட்பட தென் மாவட்ட முக்கிய தி.மு.க., நிர்வாகிகள் வைகோவின் பின்னால் சென்றனர். அப்போது, பல மாவட்டங்களுக்கு சென்று, நிர்வாகிகளை சந்தித்த அழகிரி, ம.தி.மு.க., பக்கம் மற்றவர்களும் செல்வதை தடுத்தார். இது தி.மு.க.,வில் அழகிரியை, அடையாளம் காட்டியது.
செல்வாக்கை காட்டிய அழகிரி
உள்கட்சிப் பிரச்சினையில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 2001 சட்டமன்றத் தேர்தலின்போது போது, மதுரையில் தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் உட்பட 10 பேரை தோல்வி அடைய செய்து, தென் மாவட்டங்களில் செல்வாக்கை காட்டினார், அழகிரி.
கசிந்த கண்களால் மீண்டும் சேர்ப்பு
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்டாலின் மற்றும் அழகிரி (அப்போது அவர் கட்சியில் இல்லை) கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்குள் சிறையில் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பின், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் அழகிரி.
தா.கி. கொலை வழக்கு
பின்னர் தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கில் சிறை சென்றார். அப்போதும் அவருக்கு என்று பலமான கோஷ்டி இருந்தது. பின்னர் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தென்மண்டலத்தின் அறிவிக்கப்படாத அதிகார மையம் ஆனார்.
இடைத்தேர்தல் வெற்றி
முதல்வரின் மகன் என்ற அடையாளத்தால் என்பதால், இப்பகுதியில் நிர்வாகம் அவரது விருப்பப்படியே நடந்தது.திருமங்கலம் உட்பட இடைத்தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்கு காரணமானார். இந்த வெற்றிகளுக்கு பரிசாக, தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அழகிரிக்கு வழங்கப்பட்டது.
அஞ்சா நெஞ்சன் அடைமொழி
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதியே அழகிரியை 'அஞ்சா நெஞ்சன்' என்று புகழ்ந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அழகிரி பிறந்தநாளில் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி, வாழ்த்தினார்.
2009 லோக்சபா தேர்தல்
தென்மாவட்டங்களில் பெரும்பான்மையான திமுக நிர்வாகிகள் அழகிரியுடன் இருந்தனர். கடந்த லோக்சபா தேர்தலில் தென்மாவட்டங்களில், தி.மு.க., கூட்டணிக்கு 9 தொகுதிகள் கிடைத்தன. இதன் பின்னணியில் அழகிரியின் கடுமையான உழைப்பு இருந்தது என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
மத்திய அமைச்சர் பதவி
இதனால் கட்சியில் இவருக்கு தனிமரியாதை கிடைத்தது. ஸ்டாலினுக்கு இணையாக கட்சியில் வளர்ந்த அழகிரி, மாநில அரசியலில் தலையிடாமல் இருக்கவே மத்திய அமைச்சராக்கப்பட்டார். அமைச்சரான பின், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் அரசியலில் இருந்து பின்வாங்க துவங்கினார் அழகிரி.
அழகிரியின் அஸ்தமனம்
2011 சட்டசபை தேர்தலில், அதிமுகவின் வெற்றியும் அழகிரியின் அமைதிக்கு காரணமாக அமைந்தது. அழகிரியின் மகன் தயாநிதி மீது, கிரானைட் முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. அழகிரி கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கினார். அழகிரி ஆதரவாளர்கள் பலரும், ஸ்டாலின் பக்கம் சாயத் தொடங்கினர்.
ஸ்டாலின் கட்டுப்பாட்டில் கட்சி
திமுகவை முழுமையாக ஸ்டாலின் தன்கைப்பிடிக்குள் கொண்டு வந்ததும், அழகிரியிடம் இருந்தவர்கள் கோஷ்டி மாறினர். அமைச்சர் பதவி போனதும், இருந்த சிலரும் விலகினர். அழகிரியும் ரொம்பவே ஒதுங்கி விட்டார். இதன் பின் மதுரையில் அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல், போஸ்டர் யுத்தம் காரணங்களால் நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர். இதில் அழகிரி ஆதரவாளர்கள் பதவி இழந்தனர். கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
அழகிரி நீக்கம்
இதனை தலைமையிடம் தட்டிக்கேட்டார் அழகிரி. தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவிக்கு என்ன மரியாதை? என்பது அழகிரியின் கேள்வி. மோதல் முற்றவே, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அழகிரியே நீக்கப்பட்டார்.
தோல்வியை தழுவிய திமுக
2014 லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு அழகிரி செய்த உள்ளடி வேலைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமல்ல என்று கருணாநிதியே சொல்லும்படியானது.
கோவிலில் பரிகாரம்
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில், மு.க. அழகிரி ராசிக்கு, அவரது மனைவி காந்தி பரிகார பூஜை செய்தார். அதோடு மட்டுமல்லாது மடப்புரம் காளிகோவிலிலும் பரிகார பூஜை செய்து விளக்கேற்றினார்.
பரிகரத்திற்குப் பலன்
சத்ருக்களை சம்ஹாரம் செய்யவே மடப்புரம் காளிகோவிலில் பரிகாரம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல கட்சியில் ஸ்டாலின் ஆதரவு கோஷ்டியின் பியூஸ் பிடுங்கப்பட்டு மீண்டும் லகானை கையில் எடுத்துள்ளார் தலைவர் கருணாநிதி.
மீண்டும் ஐக்கியம்
இதனால் அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் ஆதரவாளர் கல்யாணசுந்தரம் வெளியேற்றப்பட்ட பின்னர், சிலந்தி வெளியேறிவிட்டது என்று கருத்து சொன்னார் அழகிரி. 2016 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அழகிரி மீண்டும் ஐக்கியமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மீண்டும் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தரவும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.
அதிமுகவிற்கு தாவும் மாஜிக்கள்
இதனால் திமுகவில் அழகிரிக்கு எதிராக கொடி பிடித்த மாஜிக்கள் அதிமுகவில் ஐக்கியமாகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.