அந்த சண்டையை விடுங்க, 14ம் தேதி வரைக்கும் அதிமுக அரசு கவிழாமல் இருக்குமா?
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் வருகிற 14ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினகரன் தரப்புக்கும், எடப்பாடி தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளதால், அதுவரை ஆட்சி கவிழாமல் தப்புமா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஜூன் 14ம் தேதி சட்டசபை கூட்டம் கூட்டப்படுவதாக சட்டசபை பொறுப்பு செயலாளர் கே.பூபதி அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கவுள்ளது.
மானியக் கோரிக்கைக்கான கூட்டத்தொடர் இது. எத்தனை நாட்கள் இக்கூட்டம் நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நாளை முற்பகல் 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெறும். தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகளும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும்.

அடிதடியில் கோஷ்டிகள்
ஆனால் தற்போது தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையே கடும் முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. பேசாமல் ஒதுங்கியிருங்கள் என ஜெயக்குமார் கூறியுள்ளார். அதைச் சொல்ல நீங்கள் யார் என்று தினகரன் கேட்டுள்ளார்.

அந்தோ பரிதாபம்
ஏற்கனவே ஆளுங்கட்சி மக்கள் மத்தியில் படு கேவலமாக அசிங்கப்பட்டு இருக்கிறது. கோஷ்டிகள் பல இருந்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அதிமுகவினர் யாரும் பிரியாமல் பணத்துக்காக ஒற்றுமையாக உள்ளனர். இப்படிப்பட்ட அரசை தங்களது சுயநலத்திற்காக பிற கட்சிகளும் பொறுத்துக் கொண்டுள்ளனர். மக்கள்தான் மிகப் பரிதாபமாக என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டுள்ளனர்.

கவிழுமா
இந்த நிலையில் தற்போது மூன்று துண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கிறது ஆளுங்கட்சி. இந்த சூழ்நிலையில் சட்டசபை கூட்டப்பட்டிருப்பதால் சட்டசபையில் அமளி துமளி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், அதுவரை ஆட்சி தப்புமா அல்லது கவிழுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

யாருக்கு எத்தனை பேர் ஆதரவு
ஒருங்கிணைந்த அதிமுகவிடம் மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதில் ஜெயலலிதா இறந்த பிறகு 134 ஆக குறைந்தது. ஓ.பி.எஸ் பக்கம் 12 பேர் போய் விட்டனர். தற்போது தினகரன் தரப்பிடம் 11 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையானால், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக அர்த்தம். எனவே வரும் சட்டசபைக் கூட்டத்தில் கண்டிப்பாக அமளி துமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவிழுமா
அதேசமயம், அதுவரைக்கும் அதிமுக அரசு நீடிக்குமா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சுயநலத்திற்காக நீடிக்க முடிவு செய்தால் நிச்சயம் பேரம் நடக்கும். அந்தப் பேரத்திற்கு யாராவது இறங்கி வர வேண்டும். ஆனால் யார் இறங்கிப் போவார்கள் என்பது தெரியவில்லை. இந்த முறை பிளவு பெரிதாகி வருவதால் நிச்சயம் பெரும் கலாட்டாவுக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

திமுக நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே திமுக பொறுமை காத்து வருகிறது. இந்த முறையும் அது அமைதியாக இருக்குமா அலல்து ஏதாவது அதிரடியாக செய்யுமா என்பது காத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல முக்கியப் பிரச்சினைகள் தமிழகத்தை சுழற்றி அடித்துக் கொண்டுள்ள நிலையில் இப்படி ஆளுங்கட்சியினர் பணத்திற்காகவும், பதவிக்காகவும் அடித்து நாறிக் கொண்டிருப்பது மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications