மீண்டும் ஸ்ரீரங்கத்தில் நிற்பாரா ஜெயலலிதா.. ?
சென்னை: ராசி, சென்டிமென்ட் பார்க்க வேண்டாம் என்று தீர்மானித்தால் மீண்டும் அதே ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட பிறகுதான் தனக்கு இத்தனை துயரங்கள் வந்ததாக கருதினால் அவர் தேனி மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
ஜெயலலிதா தமிழகத்தில் பல தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். பர்கூர், ஆண்டிப்பட்டி, போடி நாயக்கனூர் என போட்டியிட்டுள்ள அவர் கடந்த முறை நடந்த பொதுத் தேர்தலில் முதல் முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார்.
ஸ்ரீரங்கம் தனது மூதாதையர்களின் பூமியாகும் என்றும் பிரசாரத்தின்போது அவர் பெருமையாக கூறி வாக்கு சேகரித்தார். ஆனால் ஸ்ரீரங்கம் அவருக்கு பல துயரங்களைத் தந்து விட்டது.
தனிப்பட்ட முறையில் அவருக்கு சிக்கல் வந்து பதவியே பறி போகும் அளவுக்குப் போனது என்றால் மறுபக்கம் திருச்சியை மையமாக வைத்து அதிமுகவுக்கு பல சிக்கல்கள் அடுத்தடுத்து வந்தன. ஆட்சியமைத்தபோதே அமைச்சராக அறிவிக்கப்பட்ட மரியம் பிச்சை (திருச்சியைச் சேர்ந்தவர்) சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அதேபோல ஸ்ரீரங்கம் பரஞ்சோதி பெண் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்தார்.
அதேபோல மரியம் பிச்சையின் மகனான ஆசிக் மீராவும் பெண் விவகாரத்தில் சிக்கி கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தினார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இவரது விவகாரம்.
இதுபோக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வேறு சில "கெட்ட"ப் பெயர்களும் உள்ளன. இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட யாருமே நன்றாக இருந்ததில்லை என்கிறது இந்தத் தொகுதியின் வரலாறு.
இதற்கு முன்பு அமைச்சராக இருந்த சவுந்தரராஜன் பெரும் சரிவைச் சந்தித்தார். அதேபோல வெங்கடேச தீட்சிதர் சரிவைச் சந்தித்தார். கு.ப.கிருஷ்ணன் பெரும் சரிவைச் சந்தித்தார். திமுகவைச் சேரந்த மாயன் என்பவரும் இங்கு உறுப்பினராக அட்ரஸ் இல்லாமல் போனார். பாலசுப்ரமணியம் 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் வென்று அமைச்சரும் ஆகி பின்னர் சரிவைச் சந்தித்தார். அதிமுக பரஞ்சோதியும் இதே தொகுதியில்தான் எம்.எல்.ஏவாக இருந்தார். பின்னர் சரிவைச் சந்தித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது பெரும் கண்டத்திலிருந்து தப்பியுள்ளார் ஜெயலலிதா. மீண்டும் இதே தொகுதியில் அவர் போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதிக்கு மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.