நெல்லித்தோப்பில் நாராயணசாமிக்கு செம சவால்.. "கில்லி" மாதிரி ஜெயிப்பாரா?
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்புக்கு நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலில் புதுவை முதல்வர் நாராயணசாமி களம் இறங்குகிறார். அவருக்கு கடும் போட்டியைக் கொடுக்க என்.ஆர். காங்கிரஸ் வியூகம் வகுத்துக் காத்துள்ளது. அதை விட முதல்வரான பின்னர் வரும் முதல் தேர்தல் என்பதால் இதில் பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நாராயணசாமி.
ஏர்போர்ட் நாசா என்றும், நாசா என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர் நாராயணசாமி. இப்போது அவர் புதுச்சேரி முதல்வராக உள்ளார். முதல்வரானது முதல் அவர் சுற்றிச் சுழன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்த சர்ச்சைகள் ஒருபக்கம், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மறுபக்கம், எதிர்க்கட்சிகளின் முற்றுகை இன்னொரு பக்கம் என்று டைட்டான நிலையில்தான் தொடர்ந்து இருக்கிறார் நாராயணசாமி.
இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் அவர் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்த ஜான்குமாருக்கு பெரும் பணம் கொடுத்தார் நாராயணசாமி என்று பெரிய சர்ச்சை வெடித்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில்தான் நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி
புதுச்சேரியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் வென்றது. கூட்டணிக் கட்சியான திமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரான நாராயணசாமி முதல் முறையாக முதல்வராகியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவரான நமச்சிவாயத்தை தாண்டி அவர் முதல்வராகியுள்ளார்.
நெல்லித்தோப்பில் போட்டி
புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்றபோது அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை. எனவே அவருக்காக நெல்லித்தோப்பு தொகுதியில் வென்ற ஜான் குமார் ராஜினாமா செய்தார். அங்கு தற்போது நாராயணசாமி போட்டியிடுகிறார்.
பாதுகாப்பான தொகுதி
நாராயணசாமி நெல்லித்தோப்பை தேர்வு செய்ய முக்கியக் காரணம், கடந்த பொதுத் தேர்தலில் இங்குதான் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அதாவது 12,004 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் இங்கு திமுகவுக்கும் சற்று பலம் உள்ளது.
அதிமுக - என்.ஆர். காங்கிரஸ்
இத்தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அதிமுக சார்பிலும் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படலாம். பெரும்பாலும் ஓம் சக்தி சேகர் நிறுத்தப்படலாம் அல்லது அவரது மகனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
கில்லி மாதிரி ஜெயிப்பாரா?
நெல்லித்தோப்பு தொகுதியில் பாதுகாப்பு அதிகம் என்றாலும் கூட என்.ஆர். காங்கிரஸ், அதிமுக ஆகியவை கிடுக்கிப் பிடி போடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதால் அதைத் தாண்டி கில்லி மாதிரி நாராயணசாமி ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் காங்கிரஸ் தரப்பில் சற்றும் பீதி இல்லாமல்தான் உள்ளனராம்.