தினகரனுக்கு எதிராக திரள்கிறார்களா மாற்று சமுதாய எம்.எல்.ஏக்கள்?
சென்னை: தினகரனுக்கு எதிராக மாற்று சமூக எம்.எல்.ஏக்கள் திரண்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களை தக்க வைக்க தினகரன் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளாராம்.
இடைத் தேர்தலுக்குப் பிறகு இவர்களை தன் வசப்படுத்த பல திட்டங்களை வைத்துள்ளாராம் தினகரன். ஆனால் தினகரன் என்ன சமாதானத் திட்டங்களை முன்வைத்தாலும் அதை இவர்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது.
இதுவரை ஒரு சமுதாய ஆதிக்கத்துடன்தான் சசிகலா குரூப் இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. இதனால் தினகரன் தரப்பு பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாம்.
ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும்
தற்போது தினகரனுக்கு எதிராக ஓ.பி.எஸ்ஸும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ரகசியமாக காய் நகர்த்தி வருகிறார்கள். இதை தினகரன் கண்டுபிடித்து விட்டார்.
போட்டுக் கொடுத்த தளவாய் சுந்தரம்
தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக டெல்லியில் அமர்ந்திருக்கும் தளவாய் சுந்தரம்தான் இதை மோப்பம் பிடித்து தினகரனிடம் போட்டுக் கொடுத்தவர். ஆனால் எடப்பாடியாருக்கு எதிராக கிளர்ந்தெழ முடியாத இக்கட்டில் இருக்கிறார் தினகரன்.
அதிகாரிகள் லாபி
தற்போது தினகரன் சமூக அதிகாரிகளின் லாபியை சுந்தரம்தான் உருவாக்கி வருகிறார். அவர்தான் ஓ.பி.எஸ் - எடப்பாடியாரின் செய்கைகளை மோப்பம் பிடித்து தினகரனுக்குக் கூறி வருகிறாராம்.
இடைத் தேர்தலுக்குப் பின்
இப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறுக்கிட்டுள்ளதால் இவர்களை சரிக்கட்டுவது குறித்து இடைத் தேர்தலுக்குப் பி்ன்னர் பார்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம் தினகரன். இதற்காக பல வியூகங்களை திட்டமிட்டு வருகிறாராம்.
இரு சமூகத்தினரை வளைக்க
முதல்கட்டமாக, முக்குலத்தோர் எம்.எல்.ஏ.க்கள், கொங்கு வேளாளாருக்கு எதிரான வன்னியர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலித் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது குறித்து ஆலோசித்துள்ளனராம்.
நம்பத் தயாராக இல்லை
ஆனால், தினகரனை கண்மூடித்தனமாக நம்பி மாற்று சமூக எம்.எல்.ஏ.க்கள் ஏமாற தயாராக இல்லை என்பதாகவே அவர்கள் தரப்பிலிருந்து தெரிய வருகிறது. இடைத் தேர்தலுக்குப் பிறகு இவர்கள் ஓரணியில் திரண்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லையாம்.