டெல்லி மாதிரி ஆகுமா தமிழக நகரங்களும்.. பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்குத் தடை வருமா?
சென்னை: அதிக அளவிலான நச்சுப் புகையை வெளியேற்றும் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்துப் பரிசீலிக்குமாறும் அது ஆலோசனை கூறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பழையபாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

பூபாலன் தாக்கல் செய்திருந்த மனுவில், மக்கள் தற்போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல பெரும்பாலும் மோட்டார் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகையினால் மாசு ஏற்படுவதுடன், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் குந்தகம் ஏற்படுத்துகிறது.
சென்னையில் மோட்டார் வாகனங்களில் இருந்து அதிக அளவு நச்சுப்புகை வெளியேறுவதால், புதிதாக ஆட்டோ பெர்மிட் வாங்கும் ஆட்டோக்கள் கண்டிப்பாக காஸ் பொருத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோல் பயன்படுத்தப்படும் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படாது என்று கடந்த 2010-ம் ஆண்டு மே 5ம் தேதி தமிழ்நாடு போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்போது நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் அதிக மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால், அந்த வாகனங்களில் இருந்து நச்சு புகை அதிகம் வெளியேறுகிறது. எனவே, சென்னையை போல, நாமக்கல் மாவட்டம் முழுவதும் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க தடைவிதிக்க வேண்டும். இதுபோன்ற தடையை பிற நகரங்களிலும் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் வி.ஆர்.கமலநாதன், தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் பயன்படுத்தி இயக்கப்படும் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க தடைவிதிக்கும் உத்தரவை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று கூறினார்.
இதுகுறித்து அரசு 4 வாரத்துக்குள் பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும். அதுதொடர்பாக அறிக்கையை வருகிற மார்ச் 24ம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தற்போது டெல்லியில் காஸ் மூலம் இயங்கும் டாக்சி, அரசுப் பேருந்துகள் உள்ளிட்டவைதான் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் புகை மாசைக் குறைக்க டெல்லியில் மிகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தமிழகத்தில் வாகனப் புகை மாசு மகா கொடூரமாக இருக்கிறது. குறிப்பாக கரும்புகையைக் கக்கியபடி ஓடும் ஆட்டோக்களைப் பார்த்தாலே இதயம் பதறுகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இந்த உத்தரவின் மூலம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications