மதுரை ரயில் நிலையத்தை மாசுபடுத்தும் கெட்ட பழக்கம்.. நிறுத்துவார்களா அதிகாரிகள்?
மதுரை ரயில் நிலையத்தில் குப்பைகளை எரிக்கும் கெட்ட பழக்கத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவார்களா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை: மதுரை ரயில் நிலையத்தை ஒரு கெட்ட பழக்கம் மாசுபடுத்தி வருகிறது. பயணிகளுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தக் கூடிய அப்பழக்கத்தை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக நகரங்களில் சேரும் குப்பைகளை சேகரித்து ஒரு இடத்தில் கொண்டு போய் கொட்டி எரிப்பார்கள். இதனால் அப்பகுதிகளில் புகை மாசு ஏற்பட்டு அக்கம் பக்கம் வசிப்போர் ஆஸ்த்மா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் அவல நிலை நிலவுகிறது. மதுரை ரயில் நிலையத்திலும் இதேபோன்ற கெட்ட பழக்கம் நடந்து வருகிறது.
மதுரை சந்திப்புக்கு வரும் ரயில்களை சுத்தப்படுத்தும்போது அதில் சேரும் குப்பைகளை மொத்தமாக கொண்டு வந்து ரயில் நிலைய வளாகத்திற்குள்ளேயே ஒரு இடத்தில் மொத்தமாக போடுகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள்தான். இவற்றை தீயிட்டுக் கொளுத்தி வருகிறார்கள். இதனால் ஏற்படும் புகையும், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெளியாகும் அபாயகரமான நச்சு வாயுக்களும் உடல் நலத்திற்கு தீங்கிழைக்கக் கூடியவையாகும்.
குறிப்பாக சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியவை. நுரையீரலைப் பாதிக்கக் கூடியவை. ஆஸ்த்மா பாதிப்பு உள்ளோருக்கு இது பெரும் அபாயகரமானதாகும். ஆனால் இந்தக் கெட்ட பழக்கத்தை தடுத்து நிறுத்தாமல் அதிகாரிகள் அமைதியாக உள்ளனர். இதைத் தடுத்து நிறுத்தி மாசற்ற ரயில் நிலையமாக மதுரை திகழ ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
புகைப்படங்கள்: பேராசிரியர் பொ.ராஜமாணிக்கம்