கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
Recommended Video
சென்னை: நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யும் நிலைமைக்கு மீண்டும் ஒருமுறை தேர்தல் ஆணையம் தள்ளப்படும் என்ற தோற்றம் உருவாகியுள்ளது, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஏப்ரலில் பணப்பட்டு்வாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகரில் மீண்டும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு தாக்கல் ஆரம்பம் முதலே குழப்பமும், கொந்தளிப்பும்தான் மிஞ்சியுள்ளது.
குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் விஷாலும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும்.
விஷால் வேட்புமனு
விஷால் மற்றும் தீபா ஆகிய இரு சுயேட்சைகள் மனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிலும் தீபாவுக்காவது ஒரு காரணத்தை சொல்லி உடனே தள்ளுபடி செத்ததை தெளிவுபடுத்திய தேர்தல் அதிகாரி, விஷாலை போகவிட்டு போக்குகாட்டிவிட்டார். முதலில் தள்ளுபடி என்றும் பிறகு ஏற்பு என்றும் தகவல்கள் வெளியாகி, நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் விஷால் வேட்புமனு தள்ளுபடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பணம் பாய்கிறது
இதன்பிறகு, எதிர்பார்த்ததை போலவே இம்முறையும், ஆர்.கே.நகரில் பணம் என்பது, சாப்பாட்டு இலையில் தெளிக்கப்படும் நீரைப்போலவும், குக்கரில் வேகும் சோறைப்போலவும் தாராளமாக புழங்க ஆரம்பித்துள்ளது. சூரியனும் சுட்டெரிக்க, சூடாகிப்போயுள்ளனர் பிற வேட்பாளர்கள். விஷால் பிரச்சினை மட்டுமின்றி, பணப்பட்டுவாடா பிரச்சினையையும் கண்டுகொள்ளவில்லை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி என்று திமுக புகார் மனுக்களை கொடுக்க ஆரம்பித்தது.
நடு ரோட்டில் அமர்ந்த தமிழிசை
மற்றொருபக்கம், நாட்டையே ஆளும் பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையை நடு ரோட்டில் உட்கார வைத்துவிட்டது இந்த முறைகேடுகள். பண பட்டுவாடா பகிரங்கமாக நடக்கிறது என்று சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டார் தமிழிசை. எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்று கடந்து போக முடியாத அளவுக்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
ராஜேஷ் லக்கானியே ஒப்புதல்
வேட்பு மனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அல்ல, ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தமிழக தலைவரே இப்படி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படியானால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அநீதி நடந்துள்ளதாகத்தானே அர்த்தம்! அநீதியை துடைக்க ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடக்குமா? பணப்பட்டுவாடா செய்தோரை கண்டுபிடித்து தேர்தலில் நிற்க தடை விதித்து மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? இதெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
பாஜக சமிக்ஞைகள்
"விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். "பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது." 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு" என்று ஒரு டிவிட்டை வெளியிட்டுள்ளார் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். இவரது யூகமும் தேர்தல் ரத்து என்பதை நோக்கியே உள்ளது. தமிழிசையின் போராட்டமும் அதற்கான சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகிறது.
ஜெயானந்த்தும் அதே தகவல்
இது மட்டுமா, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையமே உத்தரவிடும் என்று ஜெயானந்த் திவாகரன் பகீர் தகவலை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அப்படியானால், அந்த வட்டாரத்திற்கும் அதே தகவல்தான் போயுள்ளது. கள நிலவரம் களேபரமாவதால் பணப்பட்டுவாடா புகாரால் மீண்டும் ஒருமுறை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகலாம். ஆர்.கே.நகரில் அதிமுக 3வது இடத்தைதான் பிடிக்கும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு ஒன்று கூறியது குறிப்பிடத்தக்கது.