மத்திய உயர் கல்வி நிறுவனங்களா, தற்கொலைகளின் களமா?
சென்னை: கடந்த சில நாட்களாக, தேசிய ஊடகங்களின் தலைப்புச் செய்தி ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை. இதுவும் கடந்து போகும் என்பதைப் போல ரோஹித்தின் மரணத்தையும் வாய் மூடி மௌனியாக இந்த சமூகம் எடுத்து கொள்ளக் கூடாது. இந்த தற்கொலைகளின் கள ஆய்வின் முடிவில் சில கேள்விகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு முன் வைக்க விரும்புகிறேன்.
ஒவ்வாரு மாணவரும் ஒரு கண்ணாடி பொம்மை. நீங்கள் எதை பிரதிபலிகிறேர்களோ அதையே அவர்களும் பிரதிபலிப்பார்கள். ஒவ்வாரும் மிகக் கவனமாக கையாளப்பட வேண்டியவர்கள். பிரதமரின் மனதின் குரலை (Mann ki Baath) கேட்கும் மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் மனதின் குரலை கேட்கும் பொறுப்பை ஏன் பெறவில்லை?
வேதனைப் படுத்தி, கஷ்டப்படுத்தி, மனஉளைச்சலுக்கு உட்படுத்தி நீங்கள் என்ன சாதித்து உள்ளீர்கள்? பெங்களூர் அறிவியல் இந்திய நிறுவனம் தவிர எந்த மத்திய உயர் கல்வி நிறுவனங்களும் உலகத் தர வரிசைப் பட்டியலில் (world Global Ranking) இடம் பெறவில்லை.
நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள், அறிவு ஜீவத்துடன் மாணவர்களின் மனம் அறிந்து கற்பிக்கும் மனித நேயம்மிக்கவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டதோ என்று தோன்றுகிறது. ரோஹித்தையும், அவர் நண்பர்களையும் பல்கலைக் கழக வளாக வெட்ட வெளியில் கடும் குளிரில் பதிமூன்று நாட்கள் தங்க வைத்த உங்கள் மனித நேயம் சிறுமைக்கு உரியது. அறிவு சார் சமூகமே! உன் சிம்மாசனத்தை விட்டு இறக்கி வந்து ரோஹித்தின் மரணத்திற்கு பதில் சொல்லு.
ஆராய்ச்சி மாணவர்கள் அடிமைகள் அல்ல
ஆராய்ச்சி மாணவர்கள் அடிமைகள் அல்ல, உங்களிடம் யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்கள் அல்ல. ரோஹித்திற்கு ரூபாய் ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் பெலோஷிப் பாக்கி வைத்திருக்கும் நீங்கள், உங்களின் கெடுபிடியை ஏன் ஒப்பந்ததாரர்களிடம் காட்டுவதில்லை? இன்னும் எத்தனை ரோஹித்களுக்கு கடன் வைத்து இருக்கீர்கள்? அவன் உயிருடன் இருத்த போது பாக்கி வைத்த நீங்கள், அவன் இறந்த பின் எட்டு லட்சம் கொடுக்க முன் வந்து இருப்பது வேடிக்கை மட்டும் அல்ல, வேதனையும் கூட.
வாய் மூடி மௌனிகளா?
போராடுவது, எதிர்த்து கேள்விகள் கேட்பதும் மாணவ பருவத்தின் சிறப்பு அம்சம். நாட்டில் நடத்த மதக் கலவரங்கள், துக்கு தண்டனைக்கு எதிரான மக்களின் குரல்கள், சாதியப் பாகுபாடுகள், தமிழ் ஈழம், ஜல்லிக்கட்டு போன்ற பொதுப் பிரச்சனைகளில் அரசின் முடிவுகளை எதிர்த்துக் குழுக்கள் அமைத்து போராட்டங்களை முன் எடுக்கக் கூடாதா? ஆமாம் சாமிகளாகவே மாணவர்கள் இருக்க வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்கள் நினைக்கின்றனவா? மத்திய அமைச்சகம் சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டட்டும். இந்திராவிற்கு எதிரான ஜெயப்ரகாஷ் நாராயணின் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை, குஜராத்திலும் பீகாரிலும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் முன் எடுத்த சென்ற சமூகம் மாணவ சமூகம்.
கட்டமைப்பிற்காக மாணவர்களா? மாணவர்களுக்காக கட்டமைப்பா?
ஓர் மத்திய அமைச்சர், போலியான ஒழுக்க விதிகளை காரணம் காட்டி பல்கலைக்கழக தரம் உயர மாணவர்களின் மீது நடவடிக்கை தேவை என்று கடிதம் எழுதுகிறார். மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டித் தான் உங்களின் தரத்தை உயர்த்த முடியுமா? ரோஹித்தை பல்கலைக்கழக வகுப்பறையில் இருந்து துரத்தி இருக்கிறார்கள் பல்கலைக்கழக கட்டமைப்பின் பொறுப்பாளர்கள்.
பல்கலைக்கழக ஆய்வகங்களிளிருந்து துரத்தி இருக்கிறார்கள், பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து துரத்தி இருக்கிறார்கள். ஓடினான், ஓடினான், உலகத்தின் எல்லைக்கே ஓடினான், பிறகு உலகத்தை விட்டும் ஓடி விட்டான். மத்திய உயர் கல்வி நிறுவனங்களே! இன்னும் எத்தனை ரோஹித்களை விரட்டக் காத்து இருக்கிறீர்கள்?
வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை மருமகள்கள் பற்ற வைத்த கேஸ் சிலிண்டர்கள் மட்டும் வெடித்து சிதறியது என் ஞாபகத்துக்கு வருகிறது. மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்பவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.சமூக நீதியை விட மாணவர்களின் உயிர் முக்கியம். எனவே அமைச்சகம் மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயில உகந்த இடம் அல்ல என அறிவிக்க தயாரா?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் திறன் குறைவு என்று குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், கடும் மனஉளைச்சலில் தானாகவே வெளியேறிய மாணவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?
சுவர்களுக்காக சித்திரங்களா? சித்திரங்களுக்காக சுவர்களா?
நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு பொறுப்பானவர்கள் சூரியனைப் போன்றவர்கள். சூரியனிடம் இருந்து நட்சத்திரங்கள் ஒளியைப் பெற்று பிரகாசிக்க வேண்டுமே தவிர நட்சத்திரங்கள் கருகக் கூடாது. மத்திய கல்வி அமைச்சகம், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆறு வாரங்களில் ஆறு முறை நினைவூட்டல் கடிதம் எழுதி உள்ளது.
ஒட்டு மொத்த கட்டமைப்பும் மாணவர்களை பழி வாங்க துடித்து இருக்கின்றனவோ? அதே அமைச்சகத்தின் அமைச்சர், ரோஹித் இறந்தப் பின் அவன் தாயாரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொல்லுகிறார். சித்திரங்களுக்காக சுவர்களை கட்டமைத்ததின் ஒரு விளைவு தான் ரோஹித்தின் தற்கொலை. இனியாவது சுவர்களுக்காக சித்திரங்களை கட்டமையுங்கள்!
கட்டுரையாளர்: காஜா பந்தா நவாஸ், இயந்திர பொறியியல் துறை பேராசிரியர், சத்தியபாமா பல்கலைக்கழகம், சென்னை.