ரஜினியின் அரசியல் குருவாக கலக்கிய 'சோ'.. இடத்தை நிரப்புவாரா தமிழருவி மணியன்?
ரஜினியின் அரசியல் குருவான சோவின் இடத்தை தமிழருவி மணியன் நிரப்பிவிட்டாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Recommended Video

சென்னை: ரஜினியின் தற்போதைய அரசியல் ஆலோசகராக உள்ள தமிழருவி மணியன், அவரின் அரசியல் குருவாக உருவெடுப்பாரா என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் தலைப்பாக உள்ளது.
ரஜினிகாந்த் இந்த பெயர் திரைத்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் அடிக்கடி அடிப்படும் ஒரு பெயராக இருந்து வந்தது. ஆனால் ரஜினியின் இன்றைய புதிய கட்சி தொடங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலமாக அரசியலில் அவரின் பெயர் நீங்காத இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது.
அரசியலில் தான் பல ஆண்டுகளாக இருந்து வருவதாக கூறிய ரஜினி, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் இருக்கும் வரை நான் அரசியலுக்கு வர மாட்டேன், இது நான் அவருக்கு செய்யும் மரியாதையாக எடுத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக கூறியிருந்தார். அதன்படி தற்போது அந்த தலைவர் கிட்டத்தட்ட அரசியலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தன் புதிய கட்சிக்கான அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார்.

முதல் அரசியல் விமர்சனம்
1996ம் ஆண்டு பாட்ஷா பட விழாவில், தமிழக அரசியலையும் ஆட்சியாளர்களையும் ரஜினிகாந்த் முதல்முறையாக தாக்கி பேசினார். இதற்கு முன்பாக மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில் அரசியலையும், மறைமுகமாக ஆட்சியாளர்களையும் தாக்கி பல வசனங்களை அவர் பேசியிருந்தாலும், வெளிமேடையில் பேசியது அதுதான் முதல்முறை. இதனைத்தொடர்ந்து அப்போது அவருக்கு ஆதரவாக மிகப்பெரிய அலை உருவானது. அப்போது மீடியாக்கள் குறைவாக இருந்த காலக்கட்டத்திலேயே பெரிய அளவு பரபரப்பாக பேசப்பட்ட இந்த செய்தியால், ஒரு கட்டத்தில் அமெரிக்காவிற்கே ரஜினி போய் விட்டார்.

தலைகீழாக மாறிய ரஜினி
அமெரிக்காவிலிருந்து ரஜினியின் வரவுக்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து வந்த ரஜினி ஆள் அடையாளமே தெரியாதது போல மாறியிருந்தார். மொட்டை தலை, சாதாரண சிகப்பு பனியன், வெளிரிப் போன உதடுகள் என பார்க்கவே வித்தியாசமாக இருந்தார். திரையில் கலக்கிய நம்ம தலைவரா இது, என அவரின் ரசிகர்களே ஆச்சர்யப்பட்டுப்போனார்கள்.

வாய்ப்பை உதறினார்
அந்த காலக்கட்டத்தில் ரஜினிக்கு மூப்பனார், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு கரம் நீட்ட ரஜினியும் அதனை பிடித்துக்கொண்டார். ஆனால் உண்மையில் அந்த காலக்கட்டத்தில் ரஜினி தனிக்கட்சி தொடங்கியிருந்தால் இந்நேரம் ரஜினி பல முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அரசியல் ஞானி சோ
திரைப்படங்களில் காமெடியனாக நடித்தாலும் சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி, அரசியல் ஞானி, அரசியல் தீர்க்கதரிசி. இவரை வெறுப்பவர்கள் கூட இவரின் திறமையை ஒப்புக்கொள்வார்கள். ரஜினியின் அரசியல் வரவை அப்போது தடுத்தவர் சோ என்றும், ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்த சோ தவறான தகவல்கள் மூலமாக ரஜினியை அரசியலுக்கு வராமல் தடுத்து ஜெயலலிதாவிற்கு நன்மை செய்து விட்டதாக கூறுபவர்களும் உண்டு.

ரஜினியின் அரசியல் ஆலோசகர்
ரஜினியின் அரசியல் ஆர்வத்தை கண்ட சோ அவருக்கு ஒரு கட்டத்தில் அரசியல் ஆலோசகராகவும் மாறினார். தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்கள், வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து சோவிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட ரஜினிக்கு தமிழக அரசியலின் மீதான ஈர்ப்பு அதிகமானது. அதே சமயம் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தலைவர்களின் இருப்பால் தயக்கமும் அதிகமானது.

இரட்டை குழல் துப்பாக்கி
சோ அரசியல் ஆலோசகராக பல பிரமுகர்களுக்கு இருந்தாலும், ஜெயலலிதா மற்றும் ரஜினிக்கு பிரதான ஆலோசகராக இருந்து வந்தார். இதனால் அரசியல் குறித்த சில உண்மைகளும், முகத்தில் அறையும் நிதர்சனமும் ரஜினிக்கு சோ மூலமாக தெரியவந்தது. இதனால் தனது அரசியல் பிரவேசத்தை ரஜினி தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஆனால் சோவின் அறிவுரைப்படி தனது அரசியல் வரவை ரசிகர்கள் மறந்திடாத வண்ணம் அடிக்கடி நியாபகப்படுத்திக்கொண்டே இருந்தார் ரஜினி.

தனித்து விடப்பட்ட ரஜினி
சோ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பல வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை தொந்தரவு செய்ய நினைக்காத ரஜினி அரசியல் சந்தேகங்கள் மற்றும் நிலைபாடுகள் குறித்து அவரிடம் கேட்பதை குறைத்துக்கொண்டார், ஒரு கட்டத்தில் நிறுத்தியே விட்டார். இதற்கு இடையே ரஜினிக்கு அரசியல் ஆலோசனைகளை பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள். இவற்றில் எல்லாம் ரஜினி திருப்தியடையாத நிலையில் ரஜினி ஒரு கட்டத்தில் அரசியலிலிருந்து தனித்துவிடப்பட்டார். திரைத்துறையில் அதிக கவனம் செலுத்தினார். வித்தியாசமான படங்களையும் அளித்தார்.

தமிழருவி மணியன் வரவு
பல்வேறு சாக்குகளை கூறி அரசியல் பிரவேசத்தை தவிர்த்து வந்த ரஜினி தனது இயக்கம் சார்பாக 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமகவை எதிர்த்து மன்ற நிர்வாகிகளை நிறுத்தி மண்ணை கவ்வினார். இந்த வடு ரஜினியை விட்டு ஆறாத நிலையில், அதன் ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்த்து பார்த்து பேச ஆரம்பித்தார். 2016ம் ஆண்டு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த காலக்கட்டத்தில் தான் ரஜினிக்கு அரசியல் ஆலோசகராக மாறினார் தமிழருவி மணியன்.

புதிய அரசியல் ஆலோசகர்
காங்கிரஸ் பிரமுகராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய தமிழருவி மணியன், அதன்பின் ஜனதாதளம், ஜனதா கட்சி உள்ளிட்டவைகளில் அங்கம் வகித்தார். பின்னர் அவர் காந்தி மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தமிழருவி மணியனின் பேச்சுகளிலும், வியூகங்களிலும் ரஜினிக்கு நம்பிக்கை வந்ததை தொடர்ந்து, அவரை புதிய அரசியல் விமர்சகராக கருத ஆரம்பித்தார். இதனைத்தொடர்ந்து அவரின் பேச்சுகளை கேட்டு நடக்க ரஜினி ஆரம்பித்தார். நீண்ட நாளுக்கு பின் ரஜினி ரசிகர்களை சந்தித்தது கூட தமிழருவி மணியன் கொடுத்த யோசனை தான் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி அரசியல் பிரவேசம்
ரஜினி தனது நிலைப்பாட்டை கூறுவதற்கு முன்பாகவே தமிழருவி மணியன் ஊடகங்களில் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என கூறிக்கொண்டிருந்தார். இம்மாத இறுதியில் ரஜினி புதிய கட்சி தொடர்பான சாதகமான அறிவிப்பை வெளியிடுவார் என மாதத்தின் தொடக்கத்திலே தமிழருவி மணியன் கூறியிருந்தார். அதன்படியே இன்று கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார்.

சோ இடத்தை நிரப்புவாரா?
தமிழருவி மணியனின் கணிப்பு படியும், வியூகங்கள் படியும் ரஜினி செயல்பட்டு வரும் நிலையில், சோ இடத்தை அவர் நிரப்புவாரா என்பது ரஜினியின் புதிய கட்சி செயல்பட ஆரம்பித்தபின் தான் தெரியும். போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications