தூத்துக்குடியில் "போல்டாக" நின்ற பாஜக ஜெயலட்சுமி.. 'ஷாக்' கொடுத்த அதிமுக மாற்று வேட்பாளர்!
தூத்துக்குடி: நெல்லை மேயர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென விலகியது போல தூத்துக்குடியிலும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமியும் விலகுவார் என்று பேசப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகவில்லை. இதனால் தூத்துக்குடியில் அதிமுக, பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.
நெல்லை மேயர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் புவனேஸ்வரியும், பாஜக சார்பில் வெள்ளையம்மாளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று திடீரென வெள்ளையம்மாள் தனது மனுவைத் திரும்பப் பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதனால் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வாகிறார்.
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மேயர் இடைத் தேர்தலிலும் இதேபோல நடக்கப் போவதாக பரபரப்பு கிளம்பியது. அங்கு அதிமுக சார்பில் அந்தோணி கிரேசியும், பாஜக சார்பில் ஜெயலட்சுமியும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஜெயலட்சுமியை வாபஸ் வாங்க வைக்க சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் கூறின.
ஜெயலட்சுமியும் நெருக்குதலுக்குப் பணிந்து வாபஸ் பெறலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டது. ஒருவேளை ஜெயலட்சுமி வாபஸ் பெறாவிட்டால் அமைச்சர் பதவியிலிருக்கும் சண்முகநாதன் பதவிக்கு ஆபத்து வரலாம் என்றும் அதிமுகவினர் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டது.
இன்று பாஜக மாற்று வேட்பாளராக மனு செய்திருந்த ஆறுமுக சாந்தி வாபஸ் பெற்றார். மனு வாபஸ் அவகாசத்திற்குப் பின்னர் மாநகராட்சியின் ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுமதி கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக, பாஜக என 8பேர் மேயருக்கான போட்டி களத்தில் உள்ளனர்.
அதிமுக அந்தோணிகிரேஸி, பாஜக ஜெயலட்சுமி ஆகிய இருவர் தவிர மற்ற 6 பேரும் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.
மாநகராட்சியின் 37வது வார்டில் அதிமுக உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர் என்றார்.
அதிமுக மாற்று வேட்பாளர் கொடுத்த ஷாக்
ஜெயலட்சுமி வாபஸ் பெறுவார் என்பது புஸ்வாணமான நிலையில் அதிமுகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அதிமுகவின் மாற்றுவேட்பாளரான தனலட்சுமி தனது மனுவை இன்று வாபஸ் பெறவில்லை. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் 2 சுயேச்சைகள் விலகல் - அதிமுக வெற்றி
இதற்கிடையே, சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் ராஜலட்சுமியும், சுயேச்சைகளாக தெய்வானை மற்றும் மாரியம்மாள் ஆகியோரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக இரு சுயேச்சைகளிடமும் குறிப்பிட்ட தரப்பிலிருந்து தீவிரப் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகிறார்கள். இதன் விளைவாக தெய்வானையும், மாரியம்மாளும் இன்று தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் அதிமுக ராஜலட்சுமி போட்டியின்றி தேர்வாகிறார்.