யாருடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை, கூட்டணி முடிவாகவில்லை.. விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: திமுகவுடன் தேமுதிக கூட்டணியை இறுதி செய்து விட்டதாக வெளியான தகவலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுத்துள்ளார்.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி இறுதியாகி விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தேமுதிகவுக்கு 59 சீட் தர திமுக ஒப்புக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இதை இரு தரப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதேசமயம், வதந்தி கிளப்பி வருவதாக மக்கள் நலக் கூட்டணியின் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மறுபக்கம் பாஜக, தேமுதிகவுக்காக இன்னும் முயற்சித்து வருவதாக தெரிகிறது. தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேச இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் சென்னை வந்திருந்தார். அவர் பிரேமலதாவைச் சந்தித்துப் பேசினார்.
சிலநாட்களுக்கு முன்பு சென்னை வந்து விஜயகாந்த்தை அவரது வீட்டில் வைத்துச் சந்தித்தார் பிரகாஷ். அப்போது ஜவடேகரிடம், பாஜக தலைமை தன்னை சற்றும் மதிப்பதில்லை என்று புலம்பித் தள்ளி விட்டார் விஜயகாந்த் என்று கூறப்பட்டது. மேலும் அந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்துப் பேசவில்லை என்றும் தேமுதிக கூறி பாஜகவை டென்ஷனாக்கியது.
இந்த நிலையில் மீண்டும் இன்று வந்து விஜயகாந்த்தை அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டது. வந்து விட்டார் என்று கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாகவே விஜயகாந்த் ரிஷிவந்தியம் புறப்பட்டுப் போய் விட்டார்.
இந்த நிலையில் திருக்கோவிலூரில்நடந்த கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.அங்கு அவர்கட்சியினர் மத்தியில் பேசுகையில், இதுவரை கூட்டணி தொடர்பாக யாருடனும் நான் பேசவில்லை. சில கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை. நடந்தால் உங்களிடம் தெரிவிப்பேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.