தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும்அ.தி.மு.க. வெற்றி பெறும்: சட்டசபையில் ஜெ. பேச்சு
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள் தான்.. வரும் சட்டசபை தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் நாங்களே வெல்வோம் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா 3 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தை தொடங்கி வைத்து தே.மு.தி.க. உறுப்பினர் அருள் செல்வன் (மயிலாடுதுறை தொகுதி) பேசினார்.
உறுப்பினர் அருள் செல்வன்: எனது தொகுதியில் கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா:- இந்த அறிவிப்பை வெளியிட்டது யாரும் நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து அல்ல. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள்தான். மயிலாடுதுறை தொகுதியை தனது தொகுதி என்று உறுப்பினர் சொந்தம் கொண்டாடுகிறார். 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறப்போவது திண்ணம்.
அருள் செல்வன்: தமிழகத்தில் எம்.ஜி. ஆருக்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: லோக்சபா தேர்தலில் தனி ஆளாக நின்று அ.தி.மு.க. 44.3% வாக்குகளை பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: தேர்தல் கமிஷன் பற்றி குறைசொல்ல உங்களுக்கு உரிமையில்லை. உள்ளாட்சி தேர்தலிலேயே உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களில் டெபாசிட் கூட பெற முடியவில்லை.
அமைச்சர் வைத்திலிங்கம்: தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நெஞ்சில் தைரியத்துடன் தேர்தலில் தனித்து நின்றால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது. ஆனால், தனித்து நிற்கும் துணிச்சல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் உண்டு.
முதல்வர் ஜெயலலிதா: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு, 234 சட்டமன்ற தொகுதிகளில் 217 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.