ஒயின்ஷாப் அதிபர் நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
சென்னை : திருநெல்வேலி பகுதியில் ஒயின்ஷாப் நடத்தி வந்தவரும் சென்னையை சேர்ந்த தொழிலதிபருமான துரைப்பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சி.என்.கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் துரைப்பாண்டியன், பிரபல தொழிலதிபர். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவருடைய மனைவி அம்சர். இவர்களுக்கு பாலமுருகன், முத்துபாண்டியன் ஆகிய இரண்டு மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் டாக்டருக்கு படித்து வருகின்றனர்.

துரைப்பாண்டியன் சென்னையில் வசித்து வந்தாலும் அடிக்கடி சொந்த ஊரான நெல்லைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்த துரைப்பாண்டியன் நேற்று தனது வீட்டில் இருந்த போது திடீரென்று கைத்துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் ஓடி வந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் துரைப்பாண்டியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டியன் உயிரிழந்தார்.
துரைப்பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை சந்திப்பு பகுதியில் உதயம் என்ற பெயரில் ஒயின்ஷாப் நடத்தி வந்தார். இதனால் அவரை உதயம் துரைப்பாண்டியன் என்றும் கூறுவர். துரைப்பாண்டியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் துரைப்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்றும் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.












Click it and Unblock the Notifications