சேதுக்கால்வாய் திட்டத்தை "மறுபரிசீலனை" செய்ய கோருகிறார் வைகோ!: பாஜக கூட்டணி எதிரொலி...?
சென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால் தற்போது சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேதுசமுத்திரத்தைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மதிமுகவின் நீண்டகால கோரிக்கை. மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்தை கொண்டுவந்ததில் தமக்கே முக்கிய பங்கு என்று பலமுறை அறிக்கைகளில் கூறிவந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்த கையோடு சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் வைகோ.
சேதுக்கால்வாய் திட்டம் பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு வைகோ நேற்று அளித்த பதில்:
சேது சமுத்திர திட்டத்தை அப்போது வெளியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தகவல் அடிப்படையில் ஆதரித்தோம். தற்போது பச்சோரி கமிஷன் ‘சேது சமுத்திர திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரமும், மீன் வளமும், சுற்றுச்சுழலும் பாதிக்கும் என்று கூறியிருப்பதையடுத்து, சேது சமுத்திர திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்
இவ்வாறு வைகோ கூறினார்.