சென்னை கட்டட விபத்து: ஒரு பெண் உயிருடன் மீட்பு– பில்டர் உள்பட 4 பேர் கைது
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்தில் இன்று ஒரு பெண் தொழிலாளர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்ச அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த இந்த பெரும் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டோரை மீட்க தீவிர நடவடிக்ககள் முடுக்கி விடப்பட்டன.
அரக்கோணத்திலிருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை மீட்பு குழுவினர் மீட்டனர். உடனடியாக அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று முதல் 20 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பில்டர்கள் - பொறியாளர்கள் கைது
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 2 பேர் மற்றும் கட்டட பொறியாளர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ப்ரைம் சிருஸ்டி நிறுவனத்தின் இயக்குநர்களான முத்து, மனோகரன் மற்றும் பொறியாளர்கள் சங்கர், துரைசிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.