சூடுபிடிக்கும் விற்பனை... ஹெல்மெட் வாங்க முட்டி மோதும் பெண்கள்... அப்ப ஆண்கள்?!
சென்னை: இரு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெட்மெட் அணிய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஹெல்மெட் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஆனால், அது முறையாக பின்பற்றப் படாததால், விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் விபத்து வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஹெல்மெட் விற்பனைக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
பெண்கள் தான் அதிகம்...
ஆனால், இவ்வாறு ஹெல்மெட் வாங்க வருபவர்களின் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்கள் வியாபாரிகள். இதன்மூலம் ஹெல்மெட் வாங்குவதில் ஆண்களை விட பெண்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் பாராட்டுகின்றனர்.
முடி உதிராது...
ஹெல்மெட் போடுவதால் தலைமுடி உதிரும் அபாயம் இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், அது உண்மையில்லை என சரும நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தற்போது கூந்தல் உதிரும் பயம் இல்லாமல் பலரும் ஹெல்மெட் வாங்க வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூடு பிடித்த விற்பனை...
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஹெல்மெட் விற்பனை இருமடங்காக உயர்ந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். விற்பனை சூடு பிடித்துள்ள போதும், தேவை அதிகரித்துள்ள போதும் ஹெல்மெட் விலையில் மாற்றமில்லை என்கின்றனர் வியாபாரிகள்.
விரைவில் விலை உயரும்...
முன்னர் விற்ற அதே விலையிலேயே தற்போது ஹெல்மெட்டுக்களை விற்று வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த விலை இப்படியே தொடருமா என்பதில் சந்தேகமே எனக் கூறும் வியாபாரிகள், இம்மாத இறுதியில் ஹெல்மெட் விலை கூடுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
புது ஹெல்மெட்...
ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்சை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தரமான ஹெல்மெட் வாங்கிய பிறகே அதை திரும்பப் பெற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனாலேயே பழைய வாகனங்களுக்குக் கூட தற்போது முதன்முறையாக ஹெல்மெட் வாங்கி வருகின்றனர் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.