மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை - மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் 'மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை' என மகளிர் தின வாழ்த்துச் செய்தியை
சென்னை: சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி:
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம் என்பதே தி.மு.கழகத்தின் இலட்சியமாகும். எந்த வகை ஆதிக்கமாக இருந்தாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுத்து, அடக்கப்பட்டு ஒடுக்கப்படுவோரின் நலன் காக்கும் திராவிட இயக்கம், அந்நாள் தொட்டு இந்நாள் வரை மகளிர் விடுதலைக்காகப் போராடுவதிலும், அவர்களின் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற்றப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதிலும் முன்னணியில் உள்ளது.
"பெண்ணடிமை தீரும்மட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்று திராவிட இயக்கத்தின் சார்பில் பாவேந்தர் குரல் கொடுத்ததை திமுக நினைவில் கொண்டு செயலாற்றி வருகிறது.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, சட்டமன்றத்தில் அவர்களுக்கானப் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
அதுபோல, 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றிய பெண்களுக்கு சொத்துரிமை தீர்மானத்தை 60ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசு சட்டமாக்கி, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கியது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என அனைத்து நிலைகளிலும் மகளிர் முன்னேற்றத்திற்குத் துணை நிற்கும் தி.மு.கழகம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்ப்பதிலும் தடுப்பதிலும் தன் கடமைகளைத் தவறாமல் நிறைவேற்றி வருகிறது. மேலும் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்று திமுக அகில இந்திய அளவில் தொடர்ந்து போராடி வருகிறது.
கல்லூரி மாணவி சரிகாஷா ஈவ்டீசிங் கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஈவ்டீசீங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, மாணவிகள்-பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு எதிராக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தி.மு.க ஓங்கிக் குரல் எழுப்பி திமுக தன்பங்களிப்பைச் செய்து வருகிறது.
சமுதாயத்தில் நிலவும் பாரம்பரியமான தடைகளைக் கடந்து பெண்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். அவர்களின் ஆற்றல் முன்எப்போதையும் விட பெருகி வருகிறது. பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும். தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கிக் கொண்டு, பல துறைகளிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு உலக மகளிர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.