3வது நாளாக அலங்காநல்லூரில் போராட்டம் தீவிரம்... பெண்கள், குழந்தைகள் சாலை மறியல்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டங்கள் 3வது நாளாக அலங்காநல்லூரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பெண்கள், குழந்தைகள் சாலை மறியல் போராட்டம் நடத்துக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கோரி அலங்காநல்லூரில் கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அலங்காநல்லூர் வாடிப்பட்டியில் நடைபெற்ற தீவிர போராட்டத்தால் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் போலீசார் நேற்று விடுதலை செய்தனர்.
இந்நிலையில், இன்றும் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதி கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஒருவாரத்தில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதுதவிர மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கா வெளி மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களும், இளைஞர்களும், மதுரையில் குவிந்துள்ளனர்.