நெல்லை-தென்காசி இடையே நான்கு வழி சாலை: விரைவில் அமையுமா?
நெல்லை: அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து தென்காசி வரை நான்கு வழி சாலை அமைக்க முயற்சி நடந்து வருகிறது.
சாலைப்பணிகளை விரைவில் முடித்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மற்றும் தென் மாவட்ட பகுதிகளிலிருந்து தென்காசி, இலஞ்சி வழியாக புனலூர்,கொல்லம் உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான சரக்குலாரிகள் சென்று வருகின்றன.
இதனால் 24 மணி நேரமும் இந்த சாலைகளில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். குற்றால சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லும். நெல்லை, தென்காசி இடையே வாகனங்கள் செல்வதற்கு இரு வழி சாலை உள்ள நிலையில் பல இடங்களில் குறுகிய பாலங்கள் இருப்பதால் நாள்தோறும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நெல்லை-தென்காசி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நான்கு வழி சாலை திட்டம் உருப்பெற்றுள்ளது. இந்த பணிக்காக தனி நெடுஞ்சாலை கோட்டம் உருவாக்கப்பட்டு பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான அலுவலகம் வெகுவிரைவில் நெல்லையில் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தென்காசி-நெல்லை இடையே நான்கு வழியாக சாலை மாற்றமுதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை துரித வேகத்தில் நடத்தினால் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளில் இந்த சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் வாகனங்கள் போவதற்கு ஒரு வழியும், திரும்பி வரும் வாகனங்கள் செல்ல வேறு வழியும் இருக்கும் நிலையில் அதை வாகன ஓட்டிகள் அலட்சியப்படுத்துவதால் தான் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை முறையாக போலீசார் ஓழுங்குபடுத்தினால் போக்குவரத்து நெருக்கடி இருக்காது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.