61 பேரை காவுகொண்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து.. ஓராண்டு நிறைவு...
சென்னை: 61 பேரின் உயிரை பலி வாங்கிய மவுலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து இன்றுடன் ஓராண்டாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் அருகில் இடிந்து விழும் நிலையிலான மற்றொரு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடி குடியிருப்பு 2014 ஆம் ஆண்டு ஜூன் 28-ந் தேதியன்று மழையின் போது மளமளவென இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்புத்துறை மீட்புப் பணிகளை மேற்கொண்ட போதிலும், நேரம் செல்லச் செல்ல. விபத்தின் தீவிரத்தை உணரத் தொடங்கினர் அதிகாரிகள். இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இரவும் பகலுமாய் ஏறத்தாழ ஒருவாரம் நீடித்த மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டாலும், இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பான்மையானோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
மவுலிவாக்கம் கட்டட விபத்து நிகழ்ந்து ஓராண்டு கடந்தாலும், அந்த பகுதியில் கட்டட விபத்தின் வடுக்கள் இன்னும் மாறவில்லை.
இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகேயுள்ள மற்றொரு அடுக்கு மாடி கட்டடத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகவே இருப்பதால், அப்பகுதியில் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட தடை தற்போது வரை நீடிக்கிறது. இந்த கட்டிடத்தையும் இடித்தால்தான் நிம்மதி என்கின்றனர் இப்பகுதி மக்கள்.