ஏற்காட்டில் அனைத்து சாவடிகளிலும் வெப்கேமரா: 25 இடங்கள் பதற்றம் நிறைந்தவை
சேலம்: ஏற்காட்டில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்காடு தொகுதி தேர்தல் அதிகாரி மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இதுவரை 3,19,00,000 ரூபாய் மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகள், வேட்டி, சேலை, ஸ்வெட்டர் போன்ற துணி வகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான மகரபூசணம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஏற்காட்டில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழு ஒன்றுக்கு 3 அதிகாரிகள் வீதம், 189 பேர் 24 மணி நேரமும் ஏற்காடு தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்.
இதுவரை ஏற்காடு தொகுதியில் 33 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். வட்டாட்சியர் தலைமையில் 13 பறக்கும் படைகளும் தொடர் மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
வெப்கேமரா கண்காணிப்பு
ஏற்காடு தொகுதியிலுள்ள 290 வாக்குச் சாவடிகளிலும் வெப்கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முழுவதும் வெப்கேமரா மூலம் பதிவு செய்து ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
பதற்றம் நிறைந்த பகுதிகள்
ஏற்காடு தொகுதியில் 25 இடங்கள் அதிக பதற்றம் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மகரபூசணம். 6 ஆய்வாளர்கள் தலைமையில் 24 மணி நேர ரோந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
22 வழக்குகள் பதிவு
போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இதுவரை 3,19,00,000 ரூபாய் மதிப்புடைய தங்கம், வெள்ளி நகைகள், வேட்டி, சேலை, ஸ்வெட்டர் போன்ற துணி வகைகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்த 210 மத்திய "ரிசர்வ்" போலீஸ் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்ததும் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் அதிகாரிகள் மகளிடம் நேரடியாக செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் மகரபூசணம் கூறினார்.