சின்ன சேலம் பள்ளியில் சான்றிதழ்களை எரித்த இளைஞர்.. ‘வீடியோவில் பளிச்’ - திருப்பூரில் தூக்கிய போலீஸ்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை எரித்ததாக இளைஞர் ஒருவரை தனிப்படை போலீசார் திருப்பூரில் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள பள்ளியில் நடந்த கலவரத்தில் அங்கு படித்த 2,700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டது.
இந்நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்துக் கொளுத்தியதாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன்.. 56 பேரின் மனுக்களை நிராகரித்த நீதிபதி!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதியில் 3வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.
பள்ளியில் வன்முறை
பள்ளி முன்பு குவிந்த போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர். அப்போது பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் வகுப்பறைகளை அடித்து நொறுக்கினர். மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் சென்றனர். மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின.
கொளுத்தப்பட்ட சான்றிதழ்கள்
இந்தக் கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஏற்கெனவே 322 பேரை கைது செய்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதற்காக போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
வீடியோக்களை ஆராயும் போலீசார்
இந்த நிலையில், வன்முறைச் சம்பவத்தின் போது அங்கிருந்த சிசிடிவி, மற்றும் சான்றிதழுக்கு தீ வைத்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் வைத்து
இதனை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்களை கொழுத்தியதாக சின்ன சேலம் அருகே மாமந்தூரைச் சேர்ந்த 34 வயதான லட்சாதிபதி என்ற நபரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். வீடியோவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். அவரை திருப்பூரில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.