டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடலூரில் போராட்டம்.. சில்வர் பீச்சில் போலீசார் குவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் போராட்டம் என தகவல் பரவியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள
கடலூர்: பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி 18 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டகள் வெடித்துள்ளன. மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இளைஞர்கள் போராட்டம்
இந்நிலையில், இன்று கடலூரில் இளைஞர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் பரவின. கடலூரில் உள்ள சில்வர் பீச் பகுதியில் போராட்டக்காரர்கள் கூட உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பதற்றம்
இதனால் கடலூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அதிக அளவில் சில்வர் பீச் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் போராட்டக்காரர்கள் சேர்ந்துவிடாதவாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கைது
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு கடுமையான கண்டனத்தை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் செய்வதற்கு முன்னர் ஒருவரை கைது செய்ய போலீசாருக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உறுதி
போலீசார் என்ன கிடுக்குபிடி போட்டு போராட்டத்தை நிறுத்தினாலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என்று கடலூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எத்தனைப் பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தாலும் போராடுவோம் அவர்கள் கூறியுள்ளனர்.